தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 33
புண்ணிலே தீக்கங்கு நுழைந்ததுபோல் இருந்தது. உயிர் ஊசலாடிற்று. ஒரு பிறவிக் குருடன் கண் பெற்று இழந்தால் என்ன துன்பம் அடைவானோ அத்தகைய துன்பத்தை அடைந்தான் அரசன்.
எண் இலா அரும் தவத்தோன் இயம்பிய சொல்,
மருமத்தின் எறிவேல் பாய்ந்த புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்
எனச் செவியில் புகுதலோடும், உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த,
ஆர் உயிர் நின்று ஊசல் ஆட, கண் இலான் பெற்று இழந்தான் என உழந்தான்
கடுந் துயரம் கால வேலான்.
இத்தகைய சங்கடங்களிலிருந்து தப்ப, தானே முனிவருடன் சென்று வேள்வி காத்துத் தருவதாகச் சொல்லி, முனிவரைத் தன்னுடன் வேள்வித் தலத்திற்கு எழுந்தருளும்படி வேண்டினான் தசரதன்.
தொடை ஊற்றும் தேன் துளிக்கும் நறும் தாரான்
ஒருவண்ணம் துயரம் நீங்கி, 'படை ஊற்றம் இலன், சிறியன் இவன், பெரியோய்!
பணி இதுவேல், பனி நீர்க் கங்கை புடை ஊற்றும் சடையானும், புரந்தரனும், நான்முகனும் புகுந்து செய்யும் இடையூற்றுக்கு இடையூறா யான் காப்பென்: பெரு வேள்விக்கு எழுக! என்றான். இதைக் கேட்ட விசுவாமித்திரர், தமது வேண்டு கோளை அரசன் உதாசீனம் செய்து விட்டான் என்று கருதி, அடங்காத கோபம் கொண்டார்.