பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வை.சு. சண்முகனார்

73

"இல்லை; எனக்குச் சொந்தமான நோட்டை நான் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமையுண்டல்லவா?" என்றார் பாரதி.

"தாராளமாக, எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்"- இது வை.சு.ச.வின் பதில்.

மீண்டும் பாரதியார் நோட்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே எழுந்து நின்றார். வை.சு.ச.வுக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஏன், ஏதாவது தேவையானால் வாங்கிவரச் சொல்கிறேனே" என்று அவரும் எழுந்து நின்றார்.

அதற்குள் கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாரதியார் தம் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டைச் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுவிட்டார்.

வை.சு.ச.வுக்கு ஒரே வியப்பு. “ஏனைய்யா கிழித்தீர்?" என்று கேட்டாராம்.

"என் நோட்டை நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். உமக்கென்னையா அக்கறை?" என்று சொல்லிக்கொண்டு கல கலவென்று சிரித்தாராம் பாரதி. இந்த நிகழ்ச்சியைச் சொல்லி விட்டு, "மேதைகளான கவிஞர்களின் விசித்திரப் பண்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. புரட்சிக் கவிஞரும் அந்தப் பாரதியாரின் தாசன்தானே? அவருடைய குணத்தில் இவருக்குப் பாதியாவது இருக்குமல்லவா?" என்றார். இவ்வாறு அவ்வை சண்முகம் எழுதுகிறார்.

வறுமையில் வாடிய பாரதியார், நுாறு உருவாத் தாளைக் கிழித்தெறிந்த நிலையை என்னென்பது? கிறுக்குத்தனமென்பதா? சிறுபிள்ளைத்தனமென்பதா?