பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 89


அதே நேரத்தில் தனது பெண்ணுக்கு ஏற்ற கணவனைத் தேடிப்பிடித்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலையும் அவரைப் பற்றிக் கொண்டது.

நாட்கள் நழுவிச் சென்றன. இளவரசியின் பிரதிநிதியாக சீமை நிர்வாகத்தை ராணி வேலு நாச்சியார் கவனித்து வந்தார். இந்த அரசியல் பாரத்தைவிட அவருக்கு தனது பெண்ணின் திருமணம் பற்றிய கவலையே மிகுதியான அழுத்தத்தை ஏற்படுத்தி வந்தது. பெண்ணைப் பெற்ற எல்லா தாய்மார்களுக்கும் ஏற்படும் இயல்பான கவலைதான். ஆனால் ராணிநாச்சியாருக்கு தனது மகளின் திருமணத்தை தாயும் தந்தையுமாகவல்லவா இருந்து நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

எங்கே மாப்பிள்ளை தேடுவது? பக்கத்தில் உள்ள மாப்பிள்ளை படைமாத்தூர் கெளரிவல்லபர். பையன் நல்ல மாதிரி. ஆனால் படைமாத்தாரில் அவருக்கு சொத்துக்கள் குறைவு. உறவினர்களில் விசேஷமான பெரியவர்களும் இல்லை. மன்னர் முத்து வடுகநாதர் கூட ஒருமுறை - காளையார் கோவில் போருக்கு முன்னர் படை மாத்தூரில் சம்மந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார். அதுமுதல் சிறுவனாக இருந்த கெளரி வல்லபன், சிவகங்கை அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தான். காரணம் பாட்டனார் நாலு கோட்டை பெரிய உடையாத் தேவர் கிளையில் சரியான பையன்கள் வேறு யாரும் இல்லை. அதே போல் அவரது சிறிய தாயார் உடைகுளம் பூதக்காள்கிளையிலும் சம்பந்தத்திற்கு தகுதியானவர்கள் இல்லை. தாயார் இராமநாதபுரம் அகிலாண்ட ஈசுவரி வழியில் இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதிதான் உள்ளார். ஏற்கனவே விட்டுப்போன பெரிய மறவர் மூலம் உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் தான்! ஆனால் அவருக்கு அண்மையில் திருமணமாகிவிட்டது. நமது செம்பி நாட்டுக் கிளை மறவர்கள் பலதாரமணம் செய்து கொள்வதில் சமூகத்தடைகள் இல்லைதான். சிவகங்கை - இராமநாதபுரம் இரு அரசுகளின் சம்பந்தமும் பொருத்தமாக இருக்கும். என்றாலும். தமக்கு இருப்பது கருவேப்பிலைக் கன்று போல ஒரே பெண் பிள்ளை. அவளை எப்படி இரண்டாம் தாரமாக இராமநாதபுரம் மன்னருக்கு திருமணம் செய்து வைப்பது? அது சரியாக இருக்குமா? தனது மகள் மன்னரது மனைவி - மகாராணி - ஆனால்...?

இப்படி குழப்பமான சிந்தனைகளில் வேலுநாச்சியாரது பொழுது கழிந்து கொண்டிருந்தது. இறுதியாக ராணியார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு முடிவிற்கு வந்தார். இளவரசி வெள்ளச்சியை படைமாத்துர் கெளரிவல்லபத் தேவருக்கு திருமணம் செய்து கொடுப்பது. அதற்கு முன்னால் சிவகங்கை மக்களும் அரண்மனை உறவினர்களும் சிவகங்கை மன்னரது வாரிசு கெளரிவல்லபத் தேவர் என்பதை உணர்ந்து கொள்ளும் வகையில் அவரை அரசு விழா ஒன்றில் அறிமுகப்படுத்தி வைப்பது