பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாமகள் இலம்பகம்17



அறிவு மிக்க அன்னையாகையால் குழந்தையைச் செல்வச் செருக்கு மிக்கவரிடம் ஒப்படைக்க ஒருப்பட்டாள். பேழையிலே வைக்கப்பட்ட கன்னனைப் போல் அவன் அங்கே கிடத்தப்பட்டான். தேர் ஒட்டி எடுத்து கன்னனைப் பேரும் புகழும் வாய்த்த மன்னன் ஆக்கினான்; அதே போலக் கந்துக்கடன் என்னும் வணிகன் ஒருவன் தன் மகவைப் பறி கொடுத்துவிட்டுத் தறிகெட்டு வந்து கொண்டிருந்தவன் அங்கே கிடத்தப்பட்ட குழந்தையைக் கண்டான்; வறியவனுக்குத் தனம் கிடைத்தது போலவும், விழியற்றவனுக்கு ஒளி கிடைத்தது போலவும் அவன் மகிழ்ந்தான்; தன் மனைவி சுநந்தையிடம் தந்து அவள் சிந்தையில் தோன்றிய துயரைத் துடைக்க முடியும் என்று முடிவு செய்தான்.

அந்தக் குழந்தை கையில் அரச மோதிரம் இருந்தது; அதை அவன் அன்னை போட்டு வைத்தாள். கள்ளக் காதலில் உள்ளம் பறிகொடுத்தவள் சுமக்க மாட்டாமல் இறக்கி வைத்த சுமை அல்ல அது; அரச மகனாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டான்.

அந்தக் குழந்தையை அவன் கையில் எடுத்த போது அது தும்மியது; அப்பொழுது கம்மிய குரலில் ‘சீவ’ என்று மறைந்திருந்த விசயை வாழ்த்திய ஒலியைக் கேட்டான். சீவன் இழந்த அவளுக்கு இவன் சீவனாக அமைந்தான்.

இறந்த மகவைப் புதைக்க வந்தவன் அதைப் புதைத்து விட்டுப் புதையல் கிடைத்ததைப் போல இப்புதியவனை எடுத்துக்கொண்டு வீடு நோக்கி விரைந்தான். பத்து மாதம் வயிற்றில் சுமந்து காத்த மகவை இறக்கி வைத்து அதைக் கண்டு மகிழ வேண்டியவள் அதனை மார்போடு அணைத்துப் பாலூட்டக் காத்திருந்தவள். வாய் திறந்து அழாத அந்தக் குழந்தையைச் சடமாகக் கண்டவள்; இப்பொழுது மனம் திடப்படுத்திக்கொள்ளப் புதிய செய்தி கொண்டு வந்தான்.