பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொர்க்கமாக இருந்தாலும் சரி, நரகமாக இருந்தாலும் சரி, இனந்தெரியாத ஒன்றன் ஆழத்தில் தாம் மூழ்கிவிட விரும்புகிறார். ஏழையின் சாவு - என்ற பாடலில் சாவை மகிழ்ச்சி தரும் இன்ப உணர்வோடு வரவேற்றுப் பாடுகிறார். சாவே! தெய்வீகப் பெரும் புகழே! தேடலுக்குப் புலப்படாத கற்பனைக் களஞ்சியமே! ஏழை விரும்பும் போது எடுத்துச் செலவிடும் பரம்பரைச் சொத்தே! புரிந்து கொள்ள முடியாத வானுலகின் வாயிற் கதவே! -என்று சாவைத் தன் சங்கீத வரிகளால் அலங்கரிக்கிறார். செயற்கைச் சொர்க்கத்துப் பரவச நிலையைக் கூட மரணத் துன்பத்தைக் கலந்துதான் அனுபவித்தார். சிதிரியாப் பயணம் (சிதிரியா-கிரேக்கக் காதல் தேவதை வீனஸ் வீற்றிருக்கும் தீவு) என்ற கவிதையில், காதல் தீவே அவருக்குக் கறைபடிந்து காட்சி யளிக்கிறது. வானம் தெளிந்த அழகோடு காட்சியளிக்கிறது. கடலும் ஆழ்ந்த அமைதியுடன் படுத்திருக்கிறது. ஆனால்எங்கும் இருள்; திட்டுத் திட்டான ரத்தக் கறைகள்! என் இதயம்-- ஒரு முரட்டுக் காகிதத்தில் சுருட்டப் பட்டுப் புதைந்து கிடப்பதாக எனக்குள் ஒர் உருவகம்! 10]