பக்கம்:சுயம்வரம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

சுயம்வரம்

"என்னை யாராவது 'உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டால் 'ஆனந்தன்' என்று சொல்லிவிடுவேன். 'தொழில் என்ன?' என்று கேட்டால் 'காரியதரிசி, சத்தியநாதன்; நைட் கிளப்' என்று சொல்ல முடியுமா? இந்த நாட்டில் ஒருவனுக்கு ஒரு துண்டு நிலம் இருந்தால் அவன் தன்னை 'லேண்ட் லார்ட்' என்று சொல்லிக்கொள்ளலாம்; ஒரு ஐந்து ரூபா பாங்க்கில் இருந்தால் 'பாங்கர்' என்று சொல்லிக்கொள்ளலாம். என்னிடமோ இரண்டும் கிடையாது. இந்த லட்சணத்தில் சட்டத்தின் கண்களுக்கு நானும் ஒரு 'கௌரவமான பிரஜை'யாக எப்படிக் காட்சி அளிப்பது? அதற்காகத்தான் அந்த வேலையைக் கட்டிக் கொண்டு அழுகிறேன்!" என்றான் அவன்.

அவள் ஒரு கணம் மௌனமாக இருந்தாள்; மறுகணம், "எனக்குத் தோன்றவில்லை, சட்டத்துக்குக் கண்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவேயில்லை. உண்மையைச் சொல்லப் போனால் அது ஒரு குருடு. ஏனெனில், யாராவது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வந்தால்தான் அது வரவேண்டிய இடத்துக்கு வருகிறது; இல்லாவிட்டால் இருக்கிற இடத்திலேயே இருந்து விடுகிறது!" என்றாள் அவள், ஒரு நீண்ட பெருமூச்சுடன்.

"அதற்காக நீ அதன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு எங்கள் கிளப்புக்கு - சாரி, 'நம் கிளப்'புக்கு வந்து விடாதே; முதலில் மதனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு வா!" என்றான் அவன், கடைசி மடக்குக் காபியையும் எடுத்துக் குடித்துவிட்டு.

அவள் எழுந்தாள்; அவளைத் தொடர்ந்து அவனும் எழுந்தான்.

இருவரும் கீழே வந்தார்கள்; "முடிந்தால் இன்றிரவே அழைத்துக்கொண்டு வந்துவிடட்டுமா?" என்றாள் அருணா.

"செய்; ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அந்த இடத்தை மாதவனுக்கு மட்டும் காட்டிக் கொடுத்து விடாதே!" என்று அவளிடம் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுச் சென்றான் ஆனந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/145&oldid=1384880" இலிருந்து மீள்விக்கப்பட்டது