பக்கம்:சுயம்வரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

சுயம்வரம்


"ஆகட்டும், பாட்டி! இனிமேல் அப்படியே வரேன்; அப்படியே போறேன். போய்விட்டு வருகிறீர்களா?" என்று பெட்டியைக் கீழே வைத்துவிட்டு அவளுக்குக் கை கூப்பி, 'சென்ட் ஆப்' கொடுக்க முயன்றாள் மதனா.

பாட்டி நகரவில்லை; "நானும் பஸ்ஸுக்குத் தாண்டியம்மா, வந்திருக்கிறேன்!" என்று நின்ற இடத்திலேயே நின்றாள்.

'இதென்ன தொல்லை?' என்று அவள் சுற்றுமுற்றும் பார்த்தபோது ஒரு டாக்ஸி அப்போது அந்தப் பக்கமாக வந்தது. சட்டென்று அதைக் கை தட்டி நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டு, "அப்போ நான் வரேன், பாட்டி! என்னை இங்கே இந்தக் கோலத்தில் பார்த்ததாக ஒருத்தர் வீட்டைக் கூடப் பாக்கியாக விடாமல் சொல்லிக்கொண்டு வருகிறீர்களா? மறந்துவிடப் போகிறீர்கள்!" என்றாள் மதனா, தன் வயிற்றெரிச்சலை வாய் வரையில் கொண்டு வந்து நிறுத்தி.

"நான் ஏண்டியம்மா, சொல்லப்போறேன்!" என்ற பாட்டி, டாக்ஸி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், "வாயைப் பார். வாயை! அப்பா, அம்மாவாப் பார்த்து ஒரு ஆம்படையானைத் தேடி வைக்கிறதுக்கு முந்தி, தானே தேடிகிட்ட கழுதையில்லே? அப்படித்தான் வாய் நீளும்!" என்று அவளை வாயார, மனமார ஆசீர்வதித்தாள்.

முக்காட்டைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்த மதனாவைக் கண்டதும், அவளை ஏற்கெனவே அங்கு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் போல், "வரவேணும், வரவேணும்!" என்று ஏக உற்சாகத்துடன் வரவேற்றாள் அருணா.

"என்னடி, இவ்வளவு பெரிய உலகத்தில் இனி எனக்காகக் கண்ணீர் விட நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்று நான் எண்ணி வந்தால்...!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/33&oldid=1384937" இலிருந்து மீள்விக்கப்பட்டது