பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

33

 புரியும் ஒரு திருப்பொது”, எவ்வுயிரும் பொதுவெனக் கண்டிரங்கி யுபகரிக்கின்றார் யாவர், அந்தச் செவ்வியர் தம் செயலனைத்தும் திருவருளின் செயல்”

சமரச நெறியைச் சேர்ந்தவர்கள் உலகத்து உயிர்களையெல்லாம் சேய்போல் எண்ணிச் சேர்ந்து பெற்ற தாய் போல் நினைப்பர். இந்நெறியைச் சேராதவர் பிற உயிர்களைக் கண்டால் ‘எட்டிக்காய் போல் கசந்து உள் கடுகடுப்பர்' சுருங்கச் சொல்லின் 'அருளுடையாரெல்லாஞ் சமரச சன்மார்க்க மடைந்தவரே' அருள் சேர்ந்த நெஞ்சினர் எல்லா உயிர்களையும் உறவாக நினைத்தலால் ஆன்ம நேய ஒருமைப்பாடு உண்டாகிறது. “அருளே நம் குலம்; அருளே நம் இனம்; அருளே நாம்”

அருள் என்பது அன்பு விரிவடைந்து பிற உயிர்களின் நன்மைக்காக உளங்கசிவது. இரக்கம் என்பது பிற உயிர்கள் துன்புறுதலைக் காணவும் கேட்கவும் பொறாது உள்ளம் குழைவது, அருள், இரக்க இயல்புகளைப் பெருக்கிக் கொண்டு இறைவன் திருவருளைப் பெறுவதே மக்கட் பிறப்பின் தலையாய நோக்கம்.

சிறந்த அறக் கருத்துகளையும் அன்பு உரைகளையும் அருள் மொழிகளையும் பேசுவது எளிது. இவற்றை நடைமுறையில் செயல்படுத்த வள்ளலார் எல்லோராலும் பின்பற்றக் கூடிய எளிய வழியைக் காட்டுகிறார். நல்வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறி என்று தமிழ் மறை கூறுகிறது. அருளுடையவர் தங்கள் ஊனைப் பெருக்குவதற்காகப் பிற உயிர்களின் ஊனை உண்ணமாட்டார்கள். அருளுடைமைக்கு வழியாகவும் அறிகுறியாகவும் மரக்கறி உணவைக் கொள்ள வேண்டும், புலால் உணவை நீக்க வேண்டும் (திருவருட்பா 1 வில் உடல், உள்ள, உயிர் ஆக்கங்களுக்கு பொருந்திய உணவு பற்றிய குறிப்புக்கள் காணலாம்) சீவகாருணியம் என்று வள்ளலார் வற்புறுத்துவது கொல்லாமையோடு நின்று விடுவதன்று. பிற உயிர்களின் துன்பத்தை நீக்கி இன்புறச்

செ. பெ.-ll-3