பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

55


நாடகங்கள் எழுந்தன. இத்தகைய நாடகங்களைச் சமைப்பதில் மிகப் புகழ் படைத்தவர் பிரெஞ்சு நாட்டு மோலியர் ஆவர். 1658 ஆம் ஆண்டின் இறுதியில் தான் அவர் நாடகத் துறையில் இறங்கினார். இப்செனிடம் நவீன சமுதாயச் சர்ச்சைகள், பெண்களின் சுதந்திர முழக்கம் இவைகள் இடம் பெற்றன, ஆனால், உருவக நாடகங்கள் தோன்றாமலில்லை. மேட்டர்லிங்க், செக்காவ் முதலியவர்கள் உருவக நாடகங்களைச் சமைத்தனர். படித்து இன்புறக்கூடிய நாடகங்கள் தோன்றின. கால்ஸ்வொர்தி சமுதாய ஊழல்களையும் போராட்டங்களையும் சித்திரித்தார். ஷாவும் இத்தகையன செய்தார்; கருத்துப் போர்களுக்கு உருக் கொடுத்தார். இம்முறையில் மேனாட்டாரின் நாடகம் செல்கின்றது.

இந்திய நாட்டின் நாடக வரலாற்றை ஆராய்வோம். வேதங்கள், உபநிஷத்துக்கள் இவைகளில் காணப்படும் உண்மைகள் புராண இதிகாசங்களில் இடம் பெறகின்றன. இதிகாசங்களை வைத்துக் கொண்டு நாடகங்களைச் சமைத்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் தோன்றிய காளிதாசன் சாகுந்தலக் கதையை மகாபாரதத்திலிருந்து எடுத்துக் கொண்டார். இந்நாடகம் ஜெர்மன் நாட்டுக் கோதேயின் உள்ளத்தைக் கவர்ந்தது.இதை வானளாவ புகழ்ந்தார். காதலும் போருந்தான் இந்திய நாடகங்களுக்கும் பொருள்களாகின்றன. இந்திய இலக்கியத்தில் துன்பியல் நாடகத்திற்கு இடமில்லை. மரணத்திற்கப்பால் ஒர் அமரவாழ்வைப் பார்க்கின்ற இயல்பு இந்தியரிடையே வேரூன்றி நிற்கின்ற காரணத்தால் துன்பியல் நாடகத்தை அவர்கள் நாடவில்லை. காளிதாசனிடம் பற்பல சுவைகளைப் பார்க்கின்றோம். ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பவபூதியின் உத்தரராம சரிதத்தில் சோகம் ததும்புகிறது. ஆனால், எல்லாம் அமைதியில் முடிவடைகின்றன.

அரசியல் நாடகமுமுண்டு. விசாகதத்தரின் முத்திரா ராட்சஸம் இதற்கு சான்றாகும். பொம்மலாட்டங்கள்