பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

செம்மொழிப் புதையல்


இவர்களை அஜிதகேச கம்பளர் என்பர். ஆசிரியர் திருவள்ளுவர் வினையும் மறுபிறப்பும் பிறவும் மேற்கொண்டொழுகும் கொள்கையினர் என்பதை முன்பே கண்டோம்.

ஒருவருடைய நினைவு, சொல், செயல்களாகத் தோன்றும். வினைப்பயன் பழுத்து நிற்கும் நிலையில் ஊழ்வினை என்று கூறப்படுகிறது. ஊழ்த்தல் என்பது “இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர்” என்றும் “தீஞ்சுளைப் பலவின்பழம் ஊழ்க்கும்மே” (புறம்) என்றும் சான்றோர் வழங்குவதால் ஒரு வினைச் சொல்லாதலைக் காண்கிறோம். இதன் பொருள் பயனுண்டாக முதிர்தல் என்பதும் அறிகின்றோம். மலர்ந்து மணமாகிய பயன் நல்கும் பூ, ஊழ்முகை (நற். 115) என்றும், கனிந்து பயன்படும் பழத்தை ஊழுறுபழம் (அகம். 117) என்றும் சான்றோர் வழங்குகின்றனர். இதனால் ஊழ்வினை யென்பது முதிர்ந்து பயன் நல்கும் வினை என்று பொருள்படுமாறு இனிது விளங்குகிறது.

பழுத்த பழம் மரத்தில் நில்லாது என்பது உலகுரை. நன்கு முதிர்ந்த கனி தன்பால் முதிரும் விதையாகிய பயனை எவ்வண்ணமேனும் அதன் முதலிலிருந்து நீக்கி அப்புறப் படுத்திவிடுமேயன்றித் தன்னிடமே கொண்டொழியாது என்பது கருத்தாம். மரம் ஒன்று பழம் ஊழ்த்தல் விதை பயந்து தன் இனம் பெருக்கும் குறிப்பிற்றாதல்போல் வினை ஊழ்த்தல் தன்பயனைத் தன்னைச் செய்தோர்க்கு நல்கி மேலும் வினைகளாகிய தன் இனத்தைப் பெருக்கும் இயல்பிற்றாம். பழுத்த பழம் விதைப்பயனை வெளிப்படுத்தாது ஒழியாமை போல ஊழ்வினையும் தன் பயனை ஊட்டாது கழியாது என்பது விளங்குகிறது. ஊழ்கணிக்கு அஃது இயற்கையமறமாதல்போல ஊழ்வினைக்குப் பயன் நல்குதல் இயற்கையறமாம். இயற்கையறம் எல்லா ஆற்றலினும் வலிமிக்கதாதலால் ஊழ்வினையின் வலிமிகப் பெரிது என்பதுபற்றி ஆசிரியர் ‘ஊழிற் பெருவலி யாவுள’ என்று அதன் வலிமிகுதியை விளக்குகின்றார்.

பழுத்து வரும் பழம் இடையே மாறுபட்ட பொருள்களால் வெம்பிப் பயன் ஊழ்க்காது போதலும் உண்டு. அதுவும் இயற்கை நிகழ்ச்சி. அதனால் ஊழ்த்துவரும் வினையும் பயன் நல்காது கெடுதற்கு வாய்ப்புண்டு என்பது பெறப்படும். கனி வகைகள்