பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

செம்மொழிப் புதையல்



இத்திணை மயக்கத்தால் ஒரு நாட்டவர் பிற நாடுகட்குக் கலத்தினும் காலினும் சென்று மிக்கவற்றைத் தந்து இல்லாதவற்றைப் பெற்றுச் சிறந்தனர். பண்டைத் தமிழர் இதன் இன்றியாமையை யுணர்ந்தே பன்னூறாண்டுகட்கு முன்பே மேலை நாட்டவரோடும் கீழை நாட்டவரோடும் பண்டமாற்றிப் பெருஞ் செல்வம் தேடிக் கொண்டனர் என்பதை வரலாறு கூறுகிறது. இவ்வகையால் பிறநாட்டுப் பண்டங்களும் பிற நாட்டு மக்களும் காவிரிப்பூம் பட்டினத்தில் நிறைந்திருந்த காட்சியை, சிலப்பதிகாரம், எடுத்தோதுகின்றது. முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும், வழங்கந் தவா வளத்ததாகி, அரும்பொருள் தரூஉம் விருந்தின்தேயம், ஒருங்கு தொக்கன்ன உடைப் பெரும் பண்டம், கலத்தினும் காலினும் தருவன ரீட்ட” நிறைந்திருக்கும் காட்சி இதனால் நன்கு புலனாதலைக் காணலாம்.

பட்டினப்பாலை யென்னும் நூல்,

‘நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்.’

ஆகிய பொருள்கள் நிறைந்திருந்தன என்றும், இவ்வழியால், ‘மொழி பல பெருகிய பழிதீர் தேயத்து புலம் பெயர் மாக்கள் கலந்தினிது’ உறைந்தனரென்றும் கூறுகின்றது.

இங்ஙனம் ஒப்புரவு வாயிலாக வாணிகமும் வேற்று நாட்டவர் கூட்டுறவும் பெருக, நாடு செல்வமும் நாகரீகமும் சிறந்து மேன்மையெய்திற்று. இன்டக்காலத்தே அலைகடல் நடுவுள் பல கலம் செலுத்தி, தொடுகடல் முதலிய நாடுகளோடும் இராசேந்திரன் முதலிய சோழர்கட்கும், கலிங்கம் ஈழம் கடாரம் முதலிய நாடுகளுடன் பாண்டியர்கட்கும் தொடர்புண்டானது இந்த ஒப்புரவை அடிப்படையாகக் கொண்டெழுந்த சிறப்பேயாகும்.