பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

245


போர் வென்றியோடு, வாகைப் பறந்தலை யென்னுமிடத்தேயும் கரிகாலன் ஒன்பது வேந்தரைவென்று மேம்பட்டான் என்பாராய்,

'விரியுளைப் பொலிந்த பளியுடை நன்மான்
வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த
பெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்
சூடா வாகைப் பறந்தலை யாடுபெற
ஒன்பது குடையும் நன்பக' லொழித்த
பீடில் மன்னர் (அகம். 125)

என்று குறித்துள்ளார். ஆகவே, கரிகாலன் வெண்ணிப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் வாகைப் பறந்தலையில் ஒரு பெரும் போரும் செய்து வெற்றி பெற்றுள்ளான் என்பது பெறப்படும். இதன் கண், 'வெருவரு தானையொடு வேண்டு’. புலத் திறுத்த, பெருவளக் கரிகால்’ என்றதனால், இந்த வாகைப் பறந்தலை பாண்டி நாட்டின் கண்ணதாம்.

பாண்டி நாட்டில் வாகைக் குளம் என்றோர் ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உளது. வாகைக் குளமே வாகைப் பறந்தலையாயின், கரிகாலன் தென் பாண்டி நாட்டின் கிழக்கிலுள்ள வாகைப் பறந்தலையில் பாண்டியனையும் அவற்குத் துணைவந்த குறுநிலமன்னர் எண்மரையும் நண்பகற்போதில் தம்குடை யொழித் தோடுமாறு செய்தான் என்பது துணிபாம். பின்பு அங்கிருந்து மேற்கு நோக்கித் தாமிரபரணிக் கரை வழியே கரிகாலன் சென்றிருத்தல் வேண்டும். மாமூலனார் கரிகாலன் வெண்ணிப்போரில் எறிந்த வேல் சேரலாதன் மார்பிற் பட்டு உருவி முதுகிற் புண் செய்ததற்கு நாணி வடக்கிருந்துயிர்துறந்த போது, சான்றோர் பலர் மேலுலகிற்கு அவனொடு செல்ல விரும்பித் தாமும் உயிர் விட்டனர் என்கின்றார். இதனை,

“.................... ... ... ஒண்படைக்
கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப் பொருதுபுண்ணாணிய சேரலாதன்
அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செவீஇயர்
பெரும்பிறி தாகி யாங்கு.” (அகம். 55)