பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

செயலும் செயல் திறனும்



அதற்கேற்பத் தாங்கள் வாழ்ந்து வருவார்கள். மற்றவர்கள் அவ்வாறு வாழ்வதற்கு இயலாது.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர்

(427)

பெரும்பாலும் அறிவுடையவர்கள் என்றாலே முன்னறிவுடையவர்களே என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பொதுவாக நிகழ்கால அறிவுமட்டுமே இருக்கும். உணவை உண்ணுதல், நீர் அருந்துதல், பகைக்குத் தப்புதல், மற்ற தன்னினத்துடன் ஒன்றாயிருத்தல், ஆணும் பெண்ணும் சேர்ந்து இனப்பெருக்கச் செயலில் ஈடுபடுதல், சண்டையிட்டுக் கொள்ளுதல், உறங்குதல் முதலிய செயல்களுக்கும் நிகழ்கால அறிவே போதுமானதாகும்.

பறவைகளுள் சிலவும் விலங்குகளுள் சிலவும் கடந்தகால அறிவையும் நினைவில் வைத்திருக்கும். அவ்வகைய உயிரினங்கள் தாங்கள் சென்ற வழியை அடையாளம் வைத்திருத்தல், இரை கிடைக்கும் இடங்களை நினைவில் வைத்திருத்தல், தம்மிடம் பழகியவரை நினைவில் வைத்திருத்தல், அவர்களிடம் அன்பு காட்டுதல் தம் தம்துணைகளையும் குஞ்சுகளையும், குட்டிகளையும் அடையாளந் தெரிந்து கொள்ளுதல், கற்றுக் கொடுத்த செயல்களைத் திரும்பச் செய்தல், சொல்லிக் கொடுத்த ஒலிகளையும், சில சொற்களையும் திரும்ப ஒலித்தல், சொல்லுதல் முதலிய செயல்களுக்கும் கடந்த கால அறிவு உதவுவதாகும்.

ஆனால் மாந்தர்களுக்கு மட்டுமே சிறப்பாக உள்ள எதிர்கால அறிவியல் அறிவு அவற்றிற்குச் சிறிதும் இருப்பதில்லை. அதனால்தான் புதிய சூழ்நிலைகளை அவை ஆராய்ந்து அறிவதில்லை. தங்களுக்குரிய உணவை அவை விளைவித்துக் கொள்வதில்லை;அவற்றின் ஒலியிலும் நடையிலும் வளர்ச்சியிருப்பதில்லை.

எனினும், பறவையினங்களுள் சிலவற்றிற்கும், விலங்கினங்கள் சிலவற்றுள்ளும் சில முன்னுணர்வுகள் உண்டு. அவை, வருகின்ற பருவகாலங்களை உணர்ந்து, அவற்றுக்கேற்பத் தங்கள் இருப்பிடங்களை மாற்றிக் கொள்ளுதல், எதிர்காலத்திற்கு வேண்டிய உணவுகளைச் சேமித்து வைத்தல், தங்கட்குக் குஞ்சுகளோ, குட்டிகளோ பிறக்கும் காலங்களை உணர்தல், அவற்றிற்கேற்பப் பிறப்பிடங்களை அமைத்தல், தொலைவிலுள்ள நீர் நிலைகளை உணர்ந்து அவற்றைத் தேடிச் செல்லுதல் முதலியன அவற்றின் உணர்வு நிலைகளே தவிர அறிவு