பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

15



ஒரு சிறு செய்தியை விளக்கப் புகுகையிலும், அணியணியாக அடுக்கடுக்காக எடுத்துக்காட்டுகளையும் சான்றுகளையும் நூலேடுகளாகிய தாளோடைகளில் கரைபுரண்டு நுரைததும்பப் புனலோடி நீடும்படிச் செய்துள்ள இவரின் திறம் அருமையான பாங்குடையதாகும். எண்ணுதொறும் வியப்பளிக்குந் தகையவாகும்.

சான்றுகளும் எடுத்துக்காட்டுகளும் அனைவர்க்கும் பளிச்செனப் பற்றும்படியான தகைமையுடையவை. அன்றாட நடைமுறைகளினின்று யாவர்க்கும் விளங்கும்படி எடுத்துச் சுட்டப்பெறும் இனிய தன்மையன! 'எச்சரிக்கைக்கு எடுத்துக்காட்டுகள் இதற்கு ஒர் அருமையான எடுத்துக்காட்டாகும்.

செயலையும் செயல் திறனையும் விளக்கி நிற்கும் மூலப் பணியோடு ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் எவ்வெவ்வாறெல்லாம் - எவ்வெவ்விடங்களிலெல்லாம் எப்படியெப்படியெல்லாம் நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்னும் வாழ்வியல் சூழ்வியல் நிலைகளையெல்லாம். தன் குழந்தைக்குப் பாலூட்டும் விருப்பம் நிறைந்த அன்புத் தாயின் உணர்வுடன் இடையிடையே ஊட்டமாகத் தந்துள்ளார்.

குளிப்பது பல்துலக்குவது கால்கழுவுவது போன்ற அன்றாட வினைகளிலும் எவ்வளவு முறைகள் உள்ளன என்பது பற்றியும் - மக்களில் சிலர் துய்மைப்படுத்த வினைகளைப் புறக்கணித்து, எப்படியெப்படியெல்லாம் அருவருப்பாக இயங்கி வருகின்றனர் என்பது பற்றியும் அருளுணர்வோடு அருமையாகச் சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தும் பாங்கிலெல்லாம் ஆசிரியரின் இயல்பான மக்கள்நல நாட்ட உள்ளுணர்வே ஒளிகாட்டுகின்றன.

ஒவ்வொரு சிறப்புச் சொல்லும் அதன் நிலையில் பல்வேறு கோணங்களில் ஊட்டம் பெற்றுச் சிறந்திருப்பதை நன்கு உன்னிப் பார்த்து - அக்கருத்துகளைத் திரட்டிய பொருள்வடிவை அச்சொல்லுக்கு நேரிதாக எடுத்து வைக்கும் பாங்கே தனிச்சிறப்புடையதாகும்.

விருப்பம். விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கனவே தொடர்பாய ஒரு பொருளின் மேல் தானாகச் செல்லும் மனநாட்டம்.

செருக்கு. செருக்கு என்பது நமக்கு தெரிந்த சிறிய அளவை மிகுதியாகக் கருதிக் கொள்வது.

இந்நூலின் மூலப்பகுதியே 250 பக்க அளவு கொண்டது. இதில் பன்னூற்றுக் கணக்கான பாரிய உண்மைகள் பரக்கப் பேசப் பெறுகின்றன.