பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

செயலும் செயல் திறனும்



அற்றேம் என்று அல்லல் படுபவோ பெற்றேமென்று
ஒம்புதல் தேற்றா தவர். (626)

6. இழப்பே இல்லாத ஊதியமும் ஊதியமே இல்லாத இழப்பும்

ஊதியம் பெற்றவிடத்து நாம் மகிழவில்லையா! அது போல் இழப்பைப் பெற்றவிடத்து மட்டும் ஏன் நாம் மகிழக் கூடாது? அல்லது நம்மைத் தேற்றிக் கொள்ளக்கூடாது? மேலும் இவ்வுலகின் செயல்கள் யாவுமே நல்லதும் அல்லதும், ஏற்றமும் இறக்கமும், மேடும் பள்ளமும், இன்பமும், துன்பமும், மகிழ்வும், துயரமும், ஒளியும், இருளும், ஊதியமும், இழப்பும் என்னும் முறையில் தாமே நடைபெற்று வருகின்றன. இவற்றுள் ஒருவர்க்கு எப்பொழுதும், எந்நிலையிலும் நல்லதே, அல்லது மகிழ்ச்சியே அல்லது ஊதியமே நடைபெறும் என்று நினைப்பது எவ்வளவு அறியாமை இழப்பே இல்லாமல் ஊதியமாகவே வருமானால், அவ்வூதியத்தை உயர்வாக நாம் மதிப்போமா? இருளே இல்லாமல் ஒளியாகவே இருந்தால் நாம் ஓய்வு கொள்வது எப்படி? துரங்குவது எப்படி? எப்பொழுதும் உடல் வேலை செய்து கொண்டிருக்க முடியுமா? உடல் ஓய்வு கொள்வதற்குத்தானே இருள், தூக்கம் எல்லாமும், துரக்கம் இன்றி ஊக்கமாகவே இருந்தால் உடல் மிக விரைவில் அழிவுறாதா? இவற்றை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். இழப்பே இல்லாமல் ஊதியமாகவே இருந்தால் அவ்வூதியத்தால் என்ன பயன்? அதில் இன்பமே இருக்காதே. அப்பொழுது உள்ளச் செருக்கும், உடல் மதர்ப்பும், அறிவுக் கிறுக்குமன்றோ ஏற்பட்டுப் போகும்? பசியெடுக்காமல் உணவு உண்டது எப்படி? பசித்தால்தானே உணவு உண்ண ஆர்வம் வரும். பெய்த மழைத் தண்ணிர் எல்லாம் வற்றாமலிருந்து மேலும் மேலும் மழை பெய்து கொண்டே இருந்தால், ஊரும் உலகமும் நீருக்குள் அன்றோ மூழ்கிவிடும். அதுபோல் இழப்பில்லாமல் ஊதியமாகவே இருந்தால், மேலும் மேலும் வரும் வருமானத்தை எப்படிச் செலவிடுவது? தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று வரங்கேட்டவனின் கதையாகவன்றோ ஆகிவிடும். எண்ணிப் பாருங்கள்.

எனவே, இயற்கையின் நெறிமுறையே, இயக்கமே ஏற்றத் தாழ்வுடையதாகத்தான் இருக்கும். அதற்காக நாம் வருந்த வேண்டியதில்லை. நல்லவை ஏற்படும் போது மகிழ்கின்ற நாம், அல்லவை ஏற்படும்போது ஏன் வருந்தவேண்டும்? என்று கேட்கிறார் குறளாசான்.

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? (379)

வாழ்க்கை முழுநலமாகவே இருப்பின் வாழ்க்கை சுவையாகவே இராது. நலத்தை எதிர்பார்க்க வேண்டும். அது தானே வந்தால் மதிப்பிழந்துபோகும். எதிர்பார்த்தல், ஏங்குதல், ஆசைப்படுதல் என்ற