பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

233



1. அவர் நம் செயலில் ஈடுபட்டுப் பணியாற்றுதற்குப் போதிய கல்வியறிவு செயலறிவு ஆகிய இரண்டும் முழுமையாகப் பெற்றிருத்தல் வேண்டும்.

2. செயலில் தொடர்ந்து ஈடுபடுவதற்குரிய உடல் நலத்துடன் விளங்குதல் வேண்டும்.

3. அவர் தம் உடன் பணியாற்றும் பணியாளர்களுடன், மேலாளர்களுடன் இணக்கமாகப் பணியாற்றுதற்குரிய மனநலம், பண்புநலன், ஒத்துப்போகும் தன்மை ஆகியவற்றுடன் இருத்தல் வேண்டும்.

4. ஊக்கமுடன் உழைப்பவராகவும், தாழ்ச்சி, வீழ்ச்சி, இகழ்ச்சி முதலிய தொய்வுகளைப் பொருட்படுத்தாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பொய், திருட்டு, வஞ்சகம், ஏமாற்றுதல், புறம் பேசுதல், பணியாளர்களைக் கலைத்தல், அணி சேர்த்தல், போராட்டக்குணம் ஆகியவை அற்றவராக இருத்தல், நயன்மையான குறைபாடுகளைச் சுட்டினால் அவற்றை ஏற்றுக் களைந்து கொள்ளும் மனவுணர்வு பெற்றிருத்தல் முதலிய குண நலன்களுடன் விளங்குதல் வேண்டும்.

6. கூடியவரையில் தந்நலவுணர்வு மிக்கில்லாதவராகவும், பொதுநலவுணர்வில் ஆர்வமுடையவராகவும், நடுநிலை, நேர்மை உணர்வுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

7. தெரியாதவற்றைத் தெரிந்து கொள்ளவும், தெரிந்தவற்றுக்காகச் செருக்கடையாமல் பிறர்க்கும் அவற்றைத் தெரியச் சொல்லித் தருபவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணிகளை ஏவித்தான் செய்ய வேண்டும் என்றிராமல் தாமே அறிந்து கொள்ளவும், அறிந்தவற்றை எடுத்துச் செய்யவும், அவற்றைப் பதற்றமோ சிதர்வோ இல்லாமல் பொறுமையாகவும் திறமையாகவும், நுட்பமாகவும், செப்பமாகவும், கலையுணர்வுடன் அழகாகவும் செய்யத் தெரிந்தவராகவும், அவ்வாறு தெரியா விடத்து அவற்றுள் ஆர்வமுள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.

9. தமக்கு ஏதாவது பணித் தொடர்பான மனக்குறைகள் இருப்பின், அவற்றை வேறு யாரிடமும் கூறாமல், பணிப் பொறுப்பாளர்களிடம் நேரடியாகக் கூறித் தீர்வு காண விரும்புகிற தன்மை உடையவராக இருத்தல் வேண்டும்.

10. கூடியவரை குடி, சூதாட்டம், பொழுதுபோக்குக் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபாடு, இன்பநாட்டம், ஆடம்பரம் முதலியவற்றில்