பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

செயலும் செயல் திறனும்



அவ்வாறில்லாதவர்கள் வாழ்கின்ற இடத்தில் வட்டித் தொழில் செய்தால் அது வெற்றி பெறாது. இழப்புதான் ஏற்படும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து

(496)

வலிந்த கால்களை உடைய தேராயினும் அது கடலில் ஓட இயலாது. இனி, கால்கள் இல்லாத படகு, தண்ணீரில்தான் ஓடும். அது நிலத்தில் ஓட இயலாது. எது, எது எங்கு இயங்க இயலுமோ, அது அது அங்குதான், அதற்குரிய இடத்தில் தான் இயங்கும். வினையும் அப்படிப் போன்ற நிலையை உடையதுதான் என்று அறிதல் வேண்டும்.

எனவே, வினை செய்பவன், அதற்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து, அவ்வினையைத் திறம்பெறச் செய்தல் வேண்டும் என்று தெரிந்து கொள்க

7. காலத்தில் சில நுட்பம்

இனி, காலம் கருதுதலில் இன்னொரு நுட்பமான செய்தியையும் நாம் நன்றாக விளங்கிக் கொள்ளுதல் மிக மிக இன்றியமையாததாகும்.

காலம் கருதுதல் இடத்திற்கு இடம், வினைக்கு வினை மாறுபடும் அல்லது வேறுபடும் அளவுடையது. சில நேரம் காலத்தை மேலோட்டமாகக் கருதுதல் வேண்டும். ஆனால் சில நேரமோ காலத்தை மிக முகாமையாகக் கருத வேண்டும்.

ஒரு சந்தைக்குப் போய்ச் சில பொருள்களை நாம் வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். அதன் பொருட்டு நாம் கருதியாக வேண்டிய காலம், சந்தை நடைபெறும் காலமாகும். அஃதாவது சந்தை, பொதுவாகக் காலை 10 மணி முதல் கூடத் தொடங்கி முன்னிரவு 8 மணி வரை நடைபெறும் என்றால், அதுவே சந்தைக்குச் செல்ல வேண்டிய காலமாகும். அந்த இடைப்பொழுதில் நாம் எந்த நேரத்திலாவது சந்தைக்குச் சென்று பொருளை வாங்கலாம். அது நாம் மற்ற வினைகளைச் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலத்தைப் பொறுத்து அமைத்துக் கொள்ள வேண்டியதாகும். அந்நிலையில் நாம் முன்பின்னாகச் செயல்படலாம். அதில் தவறில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட ஒரு காலத்தில், அஃதாவது மாலை 6 மணிக்குப் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்றிருந்தால், அதற்குக் கட்டாயம் அந்த நேரத்தில் போயே ஆகவேண்டும். அந்த நேரத்திற்குப் பின்னர் காலந்தாழ்த்தி நாம் போவது, நமக்கு ஒன்று இழுக்கை உண்டாக்கும். இரண்டு, பொதுமக்களுக்கு நம்மேல் இருக்கும் நம்பிக்கையைக் குறைக்கும். எனவே, அவ்விடத்தில் காலம் கருதுதல் மிகவும் இன்றியமையாததாகும். இனி, ஒருவேளை, நாம் 6 மணிக்குப்