பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 சேக்கிழார்

குறிக்கின்றது. அவ்வற்புத மண்டபத் தூண்கள்மீது பன்மணிப் போதிகைகள் இருந்தன. அவற்றின்மேற் பொன் விதானங்கள் இருந்தன. தரை சாந்தினால் மெழுகப்பட்டு இருந்தது.

இக்கோவில்கள் சுற்றுமதிலை உடையன. உயர்ந்த வாயில்களை உடையன. அவ்வாயில்கள் மீது உயர்ந்த மண்ணிடுகள் (கோபுரங்கள்) இருந்தன. அவற்றில் வண்ணம் திட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பனவும் மணிமேகலை முதலிய நூல்களிலிருந்து தெளியலாம்.

இக்கோவில்கள் அனைத்தும் சுடுமண்ணால் (செங்கற்களால்) ஆகியவை. மேற்புறம் உலோகத் தகடுகளும் மரப் பலகையும் சாந்தும் வேயப்பட்டிருந்தன. இவ்வாறே உயர்ந்த மாடமாளிகைகளும் இருந்தன. இக் கட்டடங்களைச் சுற்றி இருந்த சுவர்கட்கு உயர்ந்த கோபுரங்களையுடைய வாயில்களும், அவ்வாயில்கட்குத் துருப்பிடியாதிருக்கச் செந்நிறம் பூசப்பட்ட இரும்புக் கதவங்களும் பொருத்தப்பட்டிருந்தன.

சிதம்பரம். சிதம்பரத்தின் பழைமை கூறுதற்கில்லை. பதஞ்சலி முனிவர் கூத்தப்பெருமான் நடனத்தைக் கண்டு களித்தார் என்பது புராணச் செய்தி. பதஞ்சலி காலம் கி.மு. 150 என ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். எனவே, கோவில் எனச் சிறப்புப் பெயர்பெற்ற சிதம்பரத்தில் உள்ள கூத்தப்பிரான் திருக்கோவில் ஏறத்தாழ, கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது விளங்கும். அது படிப்படியாகச் சிறப்பினைப் பெற்று அப்பர் காலத்தில் பெருஞ் சிறப்புற்று விளங்கியது. அவர் காலத்திலேயே சிற்றம்பலம் சிறந்திருந்தது. சிற்றம்பலம் என்ற துணையானே ‘பேரம்பலம்’ உண்மையும் பெறப்பட்டது. அப்பர்