பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

31

காலத்திலேயே பொன்னம்பலம் பொலிவுற்றது என்பதற்கு அவர் பதிகமே சான்றாகும். அப்பர்க்கு முற்பட்ட 'சிம்மவர்மன் என்ற பல்லவன். தன்னைப் பீடித்த உடல் நோயைப் போக்கிக்கொள்ளத் தில்லையை அடைந்தான், வாவியில் மூழ்கினான் பொன் நிறம் பெற்றான். அதனால் ஹறிரண்ய வர்மன் (பொன்னிறம் பெற்றவன்) எனப்பட்டான் என்று கோயிற்புராணம் குறிக்கிறது. அவனே சிற்றம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்று அறிஞர் கருதுகின்றனர்.

பாடல் பெற்ற கோவில்கள்: ஏறத்தாழ கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கோச்செங்கட்சோழன் ' என்ற பேரரசன் 70 சிவன் கோவில்கள் கட்டியதாகத் திருமங்கை ஆழ்வார் அருள்யுள்ளார். தமது காலத்திற்கு பெருங் கோவில்கள் 78 இருந்தன என்று அப்பர் அருளிப் போந்தார். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடையில் சம்பந்தர் மட்டும் ஏறக்குறைய 220 கோவில்களைத் தரிசித்துப் பதிகம் பாடினார் எனின், அவற்றுள் ஒன்றேனும் அவர் காலத்தில் உண்டானது என்ற குறிப்புக் காணப்படவில்லை எனின், அப்பர்-சம்பந்தர் காலத்திற்கு முன்பே இத்தமிழகத்தில் இருநூற்றுக்கு மேற்பட்ட சிவன் கோவில்கள் இருந்தமை உண்மை அன்றோ? அக் கோவில்களில் ஆடல்-பாடல், நாளும் பலமுறை வழிபாடு, மக்கள் தவறாது கோவில் வழிபாடு செய்தல் முதலியன சிறப்புற இருந்த்ன அவை அப்பர் சம்பந்தர் காலத்திற் புதியவையாக உண்டாக வில்லை என்பதை நோக்க, பல நூற்றாண்டுகளாகவே இக்கோவில்கள் தத்தம் இடம் - பொருள்கட்கு ஏற்ப ஏற்ற மடைந்து விளங்கின என்பது தேற்றமன்றோ?


திரிகடுகம் - பல்கலைக் கழகப் பதிப்பு. பக், 10-11, 75.