பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயநிலை

99

மூதூரில், வைதிகரும் சைநரும் ஆசீவகரும் [1] பெளத்தரும் தம்மிற் கலந்து வாழ்ந்துவந்தனர். மணிமேகலை, அந்நகர்க்குச் செல்ல நேர்ந்த போது, சமயவாதியரோடெல்லாம் அவள் அளவளாவினள் என்பதனால் இதனையறியலாம். இஃது என்? செங்குட்டுவனுக்கு உடன்பிறந்தவரான இளங்கோவடிகள் அநுஷ்டித்தமதம் சைநமேயாதல் வேண்டுமென்று, அவரது வாக்கின் போக்கால் தெரிகின்றது. செங்குட்டுவனுக்கும் அவன் சகோதரர்க்கும் மிகுந்த நட்பினரான கூலவாணிகன் சாத்தனார் கொள்கையோ, பௌத்தமதமென்பதில் ஐயமில்லை. இனிச் செங்குட்டுவனால் தெய்வமாக வணங்கப் பெற்ற கண்ணகியுங் கோவலனுங் கொண்டிருந்த மதமும் அப்பௌத்தமேயா மென்பது, மணிமேகலையை நோக்கிக் கண்ணகிக் கடவுள் தன்னிகழ்ச்சி கூறிய வாக்கியங்களால் நன்கறியப்படும். [2]

இங்ஙனம், பௌத்தச்சார்பினரான கோவலன் கண்ணகிகளின் தந்தையர் கொண்ட சமயங்களோ, முறையே பௌத்தமும் ஆசீவகமும் ஆகும். இவற்றால், செங்குட்டுவன் காலத்திருந்த தென்னாட்டுச் சமயநிலையை நோக்குமிடத்து, அஃது இக்காலத்துப்போற் பரம்பரை யநுஷ்டானத்துக் குட்படாது அவ்வவர் அறிந்து கடைப்பிடித்த கொள்கை மாத்திரையாகவே இருந்ததென்பது விளக்கமாம். தந்தைமதம் மகனுக்கும், தம்பி மதம் தமையனுக்கும் உரியதாக அக்காலத்திருந்ததில்லை. ஆயினும், உறவு முறையிலும் நீதி முறையிலும், தம்முளிருந்த கொள்கை வேறுபாடு பற்றி அவர்கள் ஒருகாலும்

  1. ஆசீவகம் - சமணசமயத்தின் பாகுபாடுகளுள் ஒன்று; இம்மதத்தினர்க்குத் தெய்வம் மற்கலியென்றும், நூல் நவகதிரென்றும் கூறுவர். (மணிமே 27: 112 அரும்பதவுரை) + மணிமே. 29: 42-61.
  2. சிலப், 27: 90-100.