பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

சேரன்-செங்குட்டுவன்

கொல்லோ! யாவர் மகளோ, அறியேம். இது பெரியதோர் அதிசயந்தராநின்றது; தேவரீர் நாட்டில் நிகழ்ந்த இதனை அறிந்தருளல் வேண்டும்” என்று தாங்கள் நேரிற்கண்ட செய்திகளை அரசனுக்குக் கூறி அவனை வாழ்த்திநின்றனர்.

அப்போது அரசனது பெருஞ்சிறப்பினையும், மலைவளத்தின் மாட்சியையுங் கண்டு களிப்புற்றிருந்த மதுரைச்சாத்தனார், (கோவலன் கொலையுண்டது முதலாய செய்திகள் தம் மூரில் நிகழ்ந்தவற்றை நேரில் அறிந்தவராதலால்) செங்குட் நிவனை நோக்கி “வேந்தே! யானறிவேன், அது நிகழ்ந்தவாற்றை” என்று தொடங்கி, தன் தேவியின் சிலம்பு திருடியவனென்று கண்ணகி கணவனைப் பாண்டியன் கொலைபுரிவித்ததையும், அஃதறிந்த கண்ணகி பெருஞ்சினங்கொண்டு பாண்டியன் முன் சென்று வழக்காடி வென்றதும், பாண்டியன் தேவிமுன்பு மற்றொரு சிலம்பை வீசியெறிந்துவிட்டுக் கண்ணகி வஞ்சினங்கூறித் தன் ஒருமுலையைத் திருகிவீசி, அதினின்றெழுந்த தீயால் மதுரைமூதூரைச் சுட்டெரித்ததும், சிங்காதனத்திருந்து கண்ணகியின் வழக்கைக் கேட்ட நெடுஞ்செழியன் தான்செய்த கொடுங்கோன்மைக்கு ஆற்றாது தன் ஆசனத்தே வீழ்ந்திறந்ததும், இங்ஙனம் பாண்டியன் இறக்கவும், அவன் கோப்பெருந்தேவியும் கலக்கங்கொள்ளாதே உடனுயிர்விட்டதும் விளங்கக்கூறிவிட்டுப் பின், ‘பாண்டியனது கொடுங்கோன்மை இத்தன்மைத்து என்பதைப் பெருவேந்தனாகிய உன்னிடத்துக் கூறவந்தவள் போலத் தனக்குரிய சோணாடுசெல்லாது நின்னாடு அடைவாளாயினள் அந்நங்கை’ என்று அச்சாத்தனார் சொல்லி முடித்தனர்.