பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும்

தமிழ் மக்களது வாழ்வியற் கூ றுகளாகிய ஒழுக்கநெறி, கலை, நாகரிகம், பண்பாடு, மெய்ந்நூற்கொள்கை என்பன பிற மொழியாளரிடமிருந்து பிரித்துணர்தற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்தன என்பது, தொல்காப்பியம், பத்துப்பாட்டுப்பாடல், எட்டுத்தொகை முதலிய தொன்னூல்களால் நன்குணரப் படும். ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலும் அவர்க்குப் பின் கடைச்சங்க காலத்திலும் தமிழகத்திற் குடியேறிய வடமொழியாளர் தொடர்பினால் அன்னோர் தம் வேத நெறியானது, தமிழ்வேந்தர்களது ஆதரவுடன் தமிழ்நாட்டில் வேரூன்றித் தமிழர்சமுதாயத்திலும் இடம்பெற்று வளர்வ தாயிற்று என்பதற்குரிய குறிப்புகளும் தமிழ்த் தொன்னூல் களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. வடநாட்டில் வடமொழியாளர் மேற்கொண்ட வேத வேள்வி பற்றிய வைதிகநெறியினை யெதிர்த்து அந்நாட்டில் தோன்றிய புத்த சமண சமயங்களின் தாக்குதலால் வைதிகநெறியின் வளர்ச்சி தடைப்பட்டமையாலும் வேதத்தையே பற்றுக்கோடாகக் கொண்டுள்ள அந்நெறியானது தமிழகத்தில் மக்களது ஆதரவின்றித் தனித்துப் படர்தற்குரிய பற்றுக்கோடில்லாமை யாலும் தமிழ்மக்களால்போற்றப்பெறும் தொன்மைவாய்ந்த கடவுட்கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நன்கு வேரூன்றி நிலைபெறுவதாயிற்று. இந்நிலையில் வைதிக நெறிக்கு மாறாக வேதவேள்விகளை எதிர்க்கும் நோக்குடன் வடநாட்டில் தோன்றி வளர்ந்த சமண பெளத்த சமயங்களும் சங்ககாலத்தில் தமிழகத்தில் நுழைந்து தமிழ்மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நிலைகொள்வனவாயின. இவ்வாறு ஒன்றோடொன்று முரண்பாடுடையனவாகிய பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றுப் பரவிவரும்