சின்ன அண்ணாமலை
37
“உத்தரவு எங்கே?” என்றேன்.
ஏட்டய்யாவை நான் இவ்வளவு தூரம் எதிர்த்துப் பேசியதும் கேள்வி கேட்டதும் சுற்றி நின்ற் மக்களுக்கு ஒரு நடுக்கத்தையே கொடுத்தது. ஏனென்றால், அக்காலத்தில் போலீஸ் ஏட்டய்யா என்றால் எல்லோரும் நடுங்குவார்கள். அக்கால ஏட்டுகளுக்கு நிறைய அதிகாரம் இருந்தது. மீசையும் நிறைய இருந்தது. இக்கால ஏட்டுகளுக்கு மீசையும், சுருக்கம், அதிகாரமும் சுருக்கம். ஒரு கிராமத்திற்கு ஏட்டு வந்தால் கிராமமே நடுங்கும். வெள்ளைக்காரன் தன் அதிகாரத்தைச் சாமர்த்தியமாக அப்படி நடத்திக் கொண்டிருந்தான் நம் மக்களின் அன்றைய நிலை பற்றி மகாகவி பாரதியார் கூறினார்.
"சிப்பாயை கண்டு அஞ்சுவார். ஊர்ச்
சேவகன் வருதல் கண்டு மனம்பதைப்பார்;
துப்பாக்கிக் கொண்டு ஒருவன்-வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப்பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்;
எப்போதும் கைகட்டுவார்-இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கி நடப்பார்
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்.”
இது வெறும் பாரதியாரின் கவிதை அல்ல அவர் கதறி அழுதது. பாரதியாரின் இந்தக் கூற்றை அன்று நான் நேரில்