பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சொன்னால் நம்பமாட்டீர்கள்



என்னைப் பலமுறை போலீசார் கைது செய்ய முயன்றும் முடியவில்லை. காரணம், எப்போதும் என்னைச் சுற்றி நானூறு, ஐநூறு இளைஞர்கள் இருந்துகொண்டேயிருந்தனர். அதனால் என்னைக் கைது செய்தால் நிச்சயம் கலகம் ஏற்படும் என்று போலீசார் தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

1942 ஆகஸ்ட் 8ந் தேதி காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். இச் செய்தி காட்டுத்தீ போல நாடெங்கும் பரவியது. எங்கள் ஊரில் பெரும் புயலுடன் இடியும் மின்னலும் சேர்ந்ததுபோல் மக்கள் மனதில் குமுறல் ஏற்பட்டது. ஊரெங்கும் இதைப்பற்றியே பேச்சு.

“வெள்ளையனே வெளியே போ” என்ற முழக்கம், தெருவில் அகப்பட்ட ஒரு அப்பாவிப் போலீஸ்காரர் ஒருவரை மக்கள் சூழ்ந்து கொண்டு தாக்கி அவரது காக்கி உடை சிகப்புத் தொப்பி இவைகளைப் பறித்து தீ வைத்துக் கொளுத்திவிட்டனர்.

தேவகோட்டையிலும் அதன் சுற்றுப் புறத்திலும் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அன்று மாலை ஜவஹர் மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் கூடியிருந்தது. தடை உத்தரவை நான் மீறப்போவதாக அறிவித்திருந்தபடியால் ஊரெல்லாம் ஒரே பரபரப்புடன் கூடியிருந்தது.

போலீசாருக்கு எதிராகக் கொரில்லா போர் செய்வதற்கு மக்கள் தயாராக வந்திருந்தனர். சிலர் அரிவாள் வைத்திருந்தனர். பலர் சுலபமாகக் கொண்டு வரக் கூடிய கற்களை கொண்டு வந்திருந்தனர். இன்னும் சிலர் நல்ல வகையான நெற்றி மட்டக் கம்புகளில் காங்கிரஸ் கொடிகளை மாட்டிக் கொண்டு வந்திருந்தனர்.