பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மணவாளப் பெருமாள்

காடவராயர்கள்

காடவராயர்கள் பல்லவர் வழியில் ஒரு கிளையினர் : திருமுனைப்பாடி நாட்டுக் கூடலூரையும் சேந்த மங்கலத்தையும் தலை நகராகக் கொண்டு சோழர்களின் கீழ் அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் சோழ அரசர்களிடம் பேரன்பு உடையவர்களாய் உற்றுழி உதவியும் வந்துள்ளனர். சிம்ம விஷ்ணுவை முதலாகக் கொண்ட பல்லவமரபினர் தம்மைக் காடவர் என்று கூறிக் கொள்ளவில்லை எனினும், இரண்டாம் நந்திவர்மனது முன்னோர்கள் காடவர்குலத் தோன்றல்கள் என்று தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்கள் என்பது இங்கு அறியத் தகும்.

வீரசேகரக் காடவராயன்

இவன் மேற்குறித்த காடவர் மரபில் தோன்றியவன்; கூடலூர் என்ற நகரில் வாழ்ந்தவன். இவன் அரச நாராயணன் ஆளப்பிறந்தானான வீரசேகரக் காடவராயன் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுள்ளான். இவன் மூன்றாம் குலோத்துங்கனுடைய 9-ஆம் ஆட்சி யாண்டில் திருநறுங்கொண்டை நாற்பத் தெண்ணாயிரப் பெரும் பள்ளித் தேவர்க்குத் திருநாமத்துக் காணியாக நிலமளித்துள்ளான் (381 of 1902); அக்குலோத்துங்கனுடைய 13-ஆம் ஆட்சி யாண்டில் திருவண்ணாமலை யுடைய நாயனார்க்குச் சாத்தியருள ஏகாவலி வடம் ஒன்று அளித்துள்ளான் (531 of 1902). மேற்படி குலோத்துங்கனின் 25-ஆம் ஆட்சியாண்டு (கி. பி. 1203)க்குரிய திரு வெண்ணெய் நல்லூர்க் கல்வெட்டில் (312 of 1902 s.I.I.VI.1941) இவன் கூடலூருடையான் வீரசேகர