பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜனனி & 37 அவளைப் பரீட்சை பண்ணிப் பார்த்து, மூளையில் ஏதோ அவளை அழுத்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லி விட்டார்கள். ஜனனி, ஆஸ்பத்திரியிலும், சிறையிலுமாகக் காலத்தை மாறிமாறிக் கழித்தாள். ஆனால் எங்கும் அவளால் ஒருவருக்கும் இம்சை இல்லை. சாப்பாட்டை எதிரே வைத்தால் சாப்பிடுவாள். அவளுக்குப் பசிக்கிறது என்று யாராவது சொன்னால்தான் அவளுக்கே தெரியும். நன்னடத்தை காரணமாக, மூன்று வருஷச் சிட்சை ரத்தாயிற்று. ஆயினும் அவளுக்குப் போக்கிடம் இல்லாததால்- (அவளை வளர்த்த குடும்பம் பூண்டுகூடத் தெரியாமல் போய்விட்டது) இன்னமும் வெகுநாள் கழித்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாய், கொச்சை கொச்சையாய், பேச்சு வந்தது. முன் நினைவு சில சமயம் இருக்கும்; சில சமயம் இருக்காது. ஆகையால் பேச்சுக்களில் தொடர்பும் இருக்காது. ‘என்னில் இருக்கும் நான், உன்னில் இருக்கும் நான், நீ இல்லாத நான்! நீயே இல்லாத நீ-” என்று என்ன என்னவோ பிதற்றிக் கொண்டிருப்பாள். - ஆனால் நெற்றிக் குங்குமத்தையும் தாலிச்சரட்டையும் ஒரு நாளும் அழிக்க மறுத்துவிட்டாள். “சரியாய்ப் போச்சு! பைத்தியங்களா, அவர் செத்துப் போனார் என்று யார் புரளி பண்றது? அவரில் இருந்த நீன்னா செத்தது! அவரில் இருக்கிற நான்தான் என்னிக்குமே இருக்கே! நான் அவரோடு தினம் பேசிக் கொம்மாளமடிச்சுண்டுதான் இருக்கேன். நான் நித்திய சுமங்கலி- எனக்கு அமங்கலமே கிடையாது.” இப்படித் தனக்குத்தானே கையை நீட்டி நீட்டி மிகவும் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருப்பாள். எப்போதும் சந்தோஷமாய்ச் சிரித்தவண்ணமே இருப்பாள்.