தன சர்மா, சற்று யோசித்தார். "சரி என்ன சாப்பாடு செய்திருக்கப்போகிறார்கள் வீட்டிலே" என்று. அவர் மனதை அறிந்துரைப்பதுபோல, சகதர்மிணி கூறலானாள். "வெங்காயச் சாம்பார் அருமையா இருக்கு. அப்பளம் பொறிச்சிருக்கேன். வத்தலும் இருக்கு. கொத்தமல்லி துவையல் ஜோரா செய்திருக்கேன்" என்றாள். கொத்தமல்லி துவையலைப் போட்டுப் பிசைந்து, நெய் இரண்டு கரண்டி தாராளமாகப் போட்டு ஒரு பிடி சாப்பிட்டால், ரம்மியமாக இருக்குமே என்று சனாதனி எண்ணினார். அப்படிச் செய்வதற்கில்லையே என்பது மனதிலே உறுத்தியபோது, கோபம் கொழுந்துவிட்டு எரியலாயிற்று "சரி, சரி, போதும், உன் சாம்பாரும் துவையலும். நான் இன்னக்கிச் சாப்பிடமாட்டேன். உண்ணாவிரதம் இருக்கிறேன். ஒரு காரியமா, நாங்க சிலபேர் சேர்ந்துண்டு இன்று ஒரு சபதம் செய்துண்டோம், உண்ணாவிரதமிருக்கிறதுன்னு" என்று சனாதனி சடசடவென் மொழிந்தார். சகதர்மிணியின் சிரிப்பு அவருக்குப் பச்சை மிளகாயைக் கடித்துவிட்டால் உண்டாகும் எரிச்சலைப்போல உபத்திரவமுண்டாக்கிற்று. "உண்ணாவிரதமோ! அப்போ, ஆரஞ்சு ஒரு டஜன் தேவையில்லையோ?” என்று கேலி பேசலானாள்."ஆரஞ்சா? எதுவுயே சாப்பிடப் போரதில்லேடி ஆமாம்,சர்வ பரித்தியாகத்துக்கும் தயாராக இருக்கும் பரம்பரையன்னோ. கவனமில்லையோ?" என்று சனாதனி, உபதேசம் புரியலானார். "உண்ணாவிரதம்னு சொன்னீரே, உண்ணாவிரதமிருக்கும்போது, ஆரஞ்சுப் பழ ரசம் சாப்பிடுவான்னு சொன்னா பாருங்கோ, அதுபோலத்தானாக்குனு நெனைச்சேன். இந்தப் பித்துக்குளி யோசனை ஏன் உதிச்சுது உமக்கு. பேசாமே எழுந்துவாரும். நாளை காலையிலே ஸ்தானம் செய்யறபோது இரண்டு எலுமிச்சம் பழத்தை
43