18
ஞாயிறும் திங்களும்
சாதிச் சழக்ககலச் சாத்திரத்துச் சூழ்ச்சிகளை
மோதித் தகர்த்தெறிய முன்னேற்றம் பெற்றிலங்கக்
கட்டாயம் வேண்டும் கலப்புமணம் என்றதுண்டு
தட்டாமல் அவ்வாறே சாதி தனைத்தொலைத்தேன்
சாதிக் கலப்பைத்தான் சாற்றி நடந்ததன்றி
ஓதும் மொழிக்கலப்பை ஓர்நாளும் சொன்னதிலை
செந்தமிழில் வந்தமொழி சேர்ந்தால் இனிக்குமெனச்
சந்தைமொழி பேசும் சழக்கனென ஆகவில்லை.
பாட்டுத் தொழிலுடையேன் பண்பாட்டுச் செந்தமிழை
நாட்டுந் தொழிலுடையேன் நாட்டை யுருவாக்க
வேட்டுத் தொழில்புரிவேன் வேட்டுவைத்து நானறியேன்
வீட்டை நினைந்தறியேன் வெந்துயரம் உற்றாலும்
ஒன்றே வழியென்பேன் ஒன்றே மொழியென்பேன்
நன்றே நினைந்து நடக்கின்றேன்; ஆதலினால்
ஓங்கும் விளம்பரங்கள், உற்ற துணைபுரிந்து
தாங்குந் திருக்கைகள், தாங்காத் துயரகற்றிக்
காக்குந் திருவுளங்கள் கண்டதிலை இன்றுவரை
ஏக்கம் அதனாலே எள்ளளவும் கொண்டதிலை
நாட்டின் நலம்நினைந்து நல்ல கனவுலகில்
பாட்டுப் பறவையெனப் பாடி வருபவனை
வீட்டுத் துயர்வந்தா வீழ்த்திவிடும்? வீழ்ந்துவிடின்
பேட்டுத் தனமாகும் பிள்ளைச் செயலாகும்
ஆதலினால் நம்கழகம் அல்லற் படும்போது
வேதனை கொள்கிnறேன் வேதனையை நீக்கிடுவீர்!
காலைக் கதிரவனைக் கார்முகில் சூழ்ந்துளது
வேலைத் திறமையுடன் வீசுங்கள்! முன்போலப்
பொங்கும் இனவுணர்ச்சி பொங்கட்டும்! அவ்வுணர்ச்சி
எங்கும் பரவி எழுந்துபுயல் ஆகட்டும்!
வீசுபுயல் வேகத்தால் மேகங்கள் ஓடட்டும்!
தேசுபெறும் செங்கதிரோன் செய்யஒளி வீசட்டும்!
வீறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்!
கூறுகிறேன் என்கை குவித்து.
கலைவாணர் அரங்கம்
சென்னை
15-9-1977