பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

43



தொண்டுக்கிலக்கணங்கண்டவர்


தொண்டுக் கிலக்கணங் கண்டவர் பெரியார்

தொடர்ந்ததன் இலக்கியம் ஆகவும் உரியார்
- தொண்டு


கண்டதை ஏசியும் கல்லினை வீசியும்

கண்டவர் தாக்கினும் கொண்டது பேசித்
- தொண்டு

குளித்திடப் பன்னீர் கொடுத்திடும் செழிப்பால்
கோமான் அவரென யாவரும் அழைப்பர்
குளித்திட எனினோ முகம்மிகச் சுழிப்பார்

குளிக்குமந் நேரமும் பணியிடைக் கழிப்பார்
- தொண்டு

புகழ்ந்திடும் தோழர் போற்றின ராயினும்
பொருளென அவற்றை மதித்துளம் மயங்கார்
இகழ்ந்திடும் மாந்தர் தூற்றின ராயினும்

இருசெவி வழங்கார் எள்முனை கலங்கார்
- தொண்டு

மலர்பல தூவிய பஞ்சணை மேவிய
மதிதவழ் மாளிகைத் துயில்வளம் படைத்தார்
அலைந்திடும் ஆண்டிகள் போலதை விடுத்தே

அல்லும் பகலும் அயரா துழைத்தார்
- தொண்டு

பகலிலும் உழைப்பார் இரவிலும் விழிப்பார்
பகுத்தறி வுச்சுடர் எழுத்தினில் படைப்பார்
மிகுமிள வேனிலும் குளிர்பனி நாளிலும்

மிடுக்குடன் பொதுப்பணி யாற்றிட நடப்பார்
- தொண்டு

இளையவர் எனினும் இனியன உரைப்பார்
எதிரிக ளாயினும் கனிவுடன் அழைப்பார்
இளமையை இழந்தும் முதுமையை அடைந்தும்

இளையார் பணியிடைக் களையார் பெரியார்
- தொண்டு

பிறவியில் தலைவர் பெரும்பொருள் வணிகர்
பேணிய புகழுக் குரியார் எனினும்
துறவிகள் போலொரு தோற்றமும் உடையார்

துளிசெருக் கடையார் அடக்கமும் உடையார்
- தொண்டு
23-6-1979