பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

35


‘வேறே யாரு?’ என்றான் நிகிட்டா. ‘அது சரி. மறுபடியும் நாங்கள் வழிமாறிப் போகாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?’ என்று கேட்டான்.

‘இங்கே எங்கே வழிதப்பிப் போய்விட முடியும்? இப்படியே திரும்பி இந்தத் தெருவோடு நேரே போங்கள். ஊருக்கு வெளியே போனதும் நேராகப் போய்க் கொண்டே இருக்கவேண்டியதுதான். இடது பக்கம் திரும்பக் கூடாது. அப்படிப்போனால் பெரிய ரஸ்தா வந்து சேரும். அங்கே போனதும் வலது புறமாகத் திரும்பிவிட வேண்டியதுதானே!’

‘பெரிய ரஸ்தாவில் எந்த வழியில் திரும்ப வேணும்? கோடைகாலத் தடத்திலா? இல்லை, குளிர் காலத்து வழியிலா?’ என்று நிகிட்டா விசாரித்தான்.

‘குளிர்காலத்து வழியில்தான். அங்கே திருப்பிய உடனேயே சில புதர்கள் உங்கள் பார்வையில் படும். அவற்றுக்கு எதிரே ஒரு வழிகாட்டி உண்டு. பெரிய ஓக் மரத்தினால் ஆனது. அதில் பல கிளைகள் இருக்கும். அங்கே வழியைக் கண்டுகொள்ளலாம்.’

வாஸிலி குதிரையைத் திருப்பி வண்டியை ஊரின் எல்லைப்புறமாக ஓட்டினான்.

பின்தங்கி விட்ட ஐஸே கத்தினான் ‘ராத்திரிப் பொழுதை நீங்கள் ஏன் இங்கேயே கழிக்கக்கூடாது?’ என்று.

ஆனால் வாஸிலி பதில் பேசாமலே குதிரையை முடுக்கினான். நல்ல ரஸ்தாவில் நான்கு மைல் தூரம். அதிலும் இரண்டு மைல் காட்டுக்கு நடுவிலே போகிறது. ஆகவே சுலபமாகச் சமாளித்து விடலாம். மேலும், காற்று அடங்கிப்போனது போல் தோன்றியது.