பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆர். வெங்கட்ராமன்

திருத்துறைப்பூண்டியில் பிறந்த ஆர். வெங்கட்ராமன் விடுதலைப்போரில் பங்கு கொண்ட கலைஞன்.

275 சிறுகதைகள் எழுதி தனக்கென்று ஒரு இடத்தை இலக்கியத்தில் பிடித்துக்கொண்டவர். இவர் கதைகள் நடப்பியல் நெறியோடு கிராமிய மனம் கமழும். பாத்திரர்கள் மனதில் நீங்காது நிற்பர். ஆழமான கருத்துக்களை அழுத்தமான வார்த்தைகளால் கலைமணம் கமழ வார்ப்பதில் வல்லவர். தஞ்சை மாவட்ட மண்ணும் மக்களுமே அவரின் கதைகளுக்கு அடித்தளம். பழக்கவழக்கங்கள் காட்சிகள் அனைத்தையுமே படம்பிடித்து விடுவார். முதன் முதல் தஞ்சை மாவட்ட கிராம வாழ்வியலை இந்த மண்ணின் மனம் கமழ எழுதியவர் எம். முத்து.

'ஆர்.வியின் தாக்கம் தி. ஜானகிராமனிடம் அதிகம உண்டு' என்று மது.ச. விமலானாந்தம் குறிப்பிடுகிறார்.

‘அணையாவிளக்கு' 'திரைக்குப்பின்' இந்த இரண்டு நாவல்களும் குறிப்பிடத்தக்கவை. நாவல்களில் இயல்பான உரையாடல்களையும் நெஞ்சம் நிறையும் கதையம்சத்தையும் காணலாம். புரட்சிகரமான கருத்துக்களையும், சிருங்கார ரசத்தையும் அளவோடு அமைத்து நாவல் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். அதில் கணிசமான வெற்றியும் கண்டவர்.

குழந்தைகளுக்கான கதைகளை எழுதி அதில் அரிய சாதனைகளைப் படைத்திருக்கும் ஆர்.வி, ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய குழந்தைகள் பத்திரிகையான 'கண்ணன்' இதழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது.