பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவிப்பு

"லீவு கிடைத்ததும் வருகிறேன்.”

கடிதத்தில் இந்த ஒரு வாக்கியந்தான் மீண்டும் மீண்டும் அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தது. 'இவருக்கு லீவு எப்போது கிடைக்குமாம்? எப்போது வருவாராம்?' என்ற பதிலும் கூடவே சுற்றி வந்தது.

நட்ட நடு நிசியில் ருக்மிணி இவ்விதம் அரற்றிக் கொண்டே திரும்பித் திரும்பிப் படுத்துப் புரண்டாள். மெத்தை வெப்பமாய்த் தகித்தது. 'குளிர்ந்த காற்றுக்கு யாரிடம் இப்படிக் கோபம்? துக்கமும் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறதே!' என்று அவள் மனமும் புழுங்கியது.

திறந்த வெளிப்பக்கம் இருந்த ஜன்னல், படிக்கட்டுப் பக்கம் இருந்த ஜன்னல் எல்லாம் நன்றாகத் திறந்துதான் கிடந்தன. 'பின்னே என்ன கேடு?'

பக்கத்தில் ஒரு பர்லாங்கு தூரத்தில் “கூ” என்று கீச்சுக் குரலில் கூவியது ரயில். “அம்மாடி! பன்னிரண்டரை மணி வண்டியா? சீ, கடிதம் எழுதிப்போட்டுட்டார் வெக்கமிலாமே! வந்தால் இதிலே தானே வரணும்? வரப்படாதோ? வந்திருந்தால் எப்படி இருக்கும்! கருகருன்னு இரண்டு வரி எனக்கும் எழுதத் தெரியாதோ?”

கீழே தெருவில் சலங்கை கட்டிய மாட்டு வண்டிகள் ஜல்ஜல்லென்று ஓடின. வண்டிக்கு யாராவது போகிறார்களோ அல்லது இறங்கித்தான் வருகிறார்களோ ருக்மிணிக்கு அந்தச் சலங்கைகளின் சத்தம் கட்டோடு பிடிக்கவில்லை.

“காதில் வந்து கதறுவதைப் போல என்ன வண்டி வேண்டிக் கிடக்கிறது?” என்று கூறிக்கொண்டே அவள் ஜன்னலருகில் எழுந்து வந்து நின்றாள். தேய்ந்த நிலா மங்கிக் கொண்டிருந்தது.

தெருவில் வண்டி வருகிறதா, போகிறதா என்று தெளிவாகத் தெரியவில்லை. அவளுக்கு அது எப்படிப் போனால் என்ன?

“லீவு கிடைத்தப்புறந்தானே வரப்போறாராம், பெரிய இவர் மாதிரி!” என்று ஆத்திரத்துடன் முணுமுணுத்துக் கொண்டே