133
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
பொருளாதார சம்பந்தமான இக்கருத்துகள் பெரும்பான்மையான இடத்தைப் பெற்றன. இவற்றுக்கான விளக்க மொழிகள், தெளிவுரைகள் மிகுதியும் பேசப்பட்டன, சுயமரியாதை இயக்கம் புது முறுக்கோடும், பொலிவோடும், வலிவோடும் வளர்ந்தோங்கிவரக் கண்ட ஆதிக்க புரியினரும் பாதிக்கப் படுவோரும், சென்னையிலுள்ள நீதிக்கட்சி ஆட்சி பெரியாருக்கு ஒத்துழைப்பதால், டெல்லியிலுள்ள மத்திய பிரிட்டிஷ் ஆட்சியின் துணையை நாடி, அடக்கி ஒடுக்கப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நுனிப்புல் மேயும் அவசரக்காரர்கள், மாகாண அரசுக்கும் பெரியாருக்கும் பகை மூண்டதாகக் கதை கட்டி விட்டனர் இந்த உண்மை புரியாமல்!
இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இதுவரை ஆற்றி வந்த அரும்பணிகள் பாழாகிப், பெரும் இழப்புக்கு உள்ளாகி, அடக்கி ஒடுக்கப்படுமோ என்ற அய்யுறவு, நலம் நாடுவோர் உள்ளத்தில் தோன்றியது. பெரியாரிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்லி, விளக்கமாக ஓர் அறிக்கை விடுத்திட வேண்டினர். அதற்கிசைந்து 1935-மார்ச் 10-ஆம் நாள் "குடி அரசு" இதழில் பெரியார் அறிவித்தார்:- “சுயமரியாதை இயக்கத்தின் அரசியல் கொள்கை - பார்ப்பன ஆதிக்கத்திலுள்ள காங்கிரசை ஒழிப்பது, இதற்காக மத்திய அரசுடன் ஒத்துழைப்பது; சமுதாயக் கொள்கை - சாதிமத பேதங்களை அகற்றுவது; மூடநம்பிக்கைகளை ஒழிப்பது; பொருளியல் கொள்கை சமதர்மம் ஆகும். இவைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரும் செயல்கள் வெற்றி பெற வேண்டுமானால் என்னைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் ஆட்சியை விட பிரிட்டிஷ் ஆட்சியே மேல் என்பதாகும்.”
காற்று காங்கிரசின் பக்கம் வீசத் தொடங்கியதால் பழுத்த மரத்தை நாடிய வவ்வால் மனிதர்கள் சிலர் இது பிரிட்டிஷ்காரரான அந்நியரை ஆதரிக்கும் போக்கு எனச் சாக்குக் கூறி வேற்றிடம் தேடினர். ஆனால் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை சுயமரியாதை இயக்கத்தின் திட்டங்களை ஏற்று நடத்த முன்வந்த நீதிக் கட்சியும் கூடப் பெரியாரின் வலையில் வீழ்ந்து விட்டதாகவும், நாத்திக சமதர்ம மோசடியில் சிக்கியதாகவும் பழைமை வாதிகளின் குற்றச் சாட்டிற்கு உள்ளாயிற்று!
எது எவ்வாறாயினும், பெரியார் - நீதிக்கட்சி உறவு, பொப்பிலி அரசர் காலத்தில் வலுப்பெற்றது சரித்திர உண்மையாகும்!
ஏறத்தாழ இந்தக் கால கட்டத்திலேயேதான் வடநாட்டில் ஆதி திராவிட சமுதாயத்தில் பிறந்த ஒப்பற்ற மேதையும் ஈடிணையற்ற போராட்ட வீரருமான டாக்டர் அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள், சாதி இந்துக்களாலும், அரசியலில் காங்கிரஸ்