பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இந்தியர்களின் கோரிக்கைகளை நேரிடையாகக் கண்டறிய, அப்போதைய இந்தியா மந்திரி சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் கிரிப்ஸ்மிஷன் என ஒன்று இந்தியாவுக்கு வருகை புரிந்தது. பெரியார் நீதிக்கட்சித் தலைவர் என்ற முறையில் கிரிப்ஸைத் சந்தித்துத் தமது திராவிடநாடு கோரிக்கையை விளக்கினார். கிரிப்சோ முதலில் இந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா எனப் பிரித்தால், பிறகு திராவிட இந்தியா, வட இந்தியா தானே வந்து விடும் என்பதாகக் கருதினாராம்.

“குடி அரசு” வார இதழும், “விடுதலை” நாளேடும் கொடிகட்டிப் பறக்கின்றன. அண்ணாவின் எழுத்தோவியங்கள்; எஸ்.எஸ். மாரிசாமி, ரா.பி. சேதுப்பிள்ளை , என்.வி. நடராசன் ஆகியோரின் கருத்தாழமிக்க கட்டுரைகள் அணிசெய்கின்றன. ஆரியர் - திராவிடர் பற்றி இலக்கிய ஆதாரங்கள் வரலாற்று உண்மைகள் பூகோளச் சான்றுகள் அடுக்கடுக்காய் எடுத்தாளப்படுகின்றன. புள்ளி விவரங்கள் பார்ப்பனக் கொள்ளையை விளக்குகின்றன. கெஜட் பதிவு பெற்ற 650 உத்தியோகங்களில் 350 பார்ப்பனர்க்கு; நூறு ரூபாய்க்கு மேல் மாதச் சம்பளம் பெறும் உத்தியோகங்கள் 6000-ல் 3508 பார்ப்பனர்க்கு; முப்பத்தைந்து முதல் அறுபது ரூபாய் வரை சம்பளம் பெறும் அலுவல்களில் 8000 பார்ப்பனர்க்கும் 9000 மற்றவர்க்கும் என்ற நெஞ்சு பதறும் நிலைமை விளக்கப்படுகின்றது.

1938-ஆம் ஆண்டு இந்திப் போரில் கண்டெடுத்த தொண்டர் மாணிக்கம் என்.வி. நடராசன், அதுவரையில் காங்கிரஸ்காரர்; சென்னை பெத்து நாய்க்கன் பேட்டை வாசி. பெரியாரின் உண்மைத் தொண்டர், அண்ணாவின் அருமை நண்பர். - திராவிடன் வார இதழில் இவர் பேனாவின் திறம் காட்டி வந்தார். தி.மு.க. அமைப்புச் செயலாளராக நெடுநாள் உழைத்தவர், எளியவர், தொழிலாளர் தோழர், கலைஞர் அமைச்சரவையில் உறுப்பினராயிருக்கும் போதே 1975-ல் மரணமடைந்தார். மக்களான சோமு, செல்வம் தி.மு.க. தொண்டர்கள். அனைத்துக் கட்சியினராலும் என்றும் நட்புரிமை பூண்டு கொண்டாடப்பட்ட, சுயமரியாதை இயக்கத்தின் மக்கள் தொடர்புத் தலைவர்.

எஸ்.எஸ். மாரிசாமி இடதுகையால் மிகமிக விரைவாகச் சரமாரியாகக் “காண்டிபம்” வாயிலாகப் பொழிவார். முதலில் காமராசருக்கும், பின்னர் இராஜாஜிக்கும் அதன்பின் கலைஞருக்கும் அணுக்கமான நண்பராக விளங்கினார். மாநிலங்களவை உறுப்பினராக நன்முறையில் கடமையாற்றியவர். 1976 மிசாக் கைதியாகி விடுதலையான பின், சிறிது நாள் ஒய்வில் இருந்தார்.

1939 செப்டம்பர் 3-ஆம் நாள் மூண்ட இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் சம்மதம் பெறாமல் இந்தியாவையும் பிரிட்டன்