பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

164



ஆரிய, இந்து பிடிப்பிலிருந்து நம் மக்கள் விடுபடத் தனி நாடுதான் சிறந்த வழி; தாயைக் கொல்வதா? பசுவை வெட்டுவதா? என்ற மாய்மாலப் பேச்சுகளுக்கெல்லாம் மயங்கிடக்கூடாது. சிலோன், பர்மா முதலிய நாடுகள் இந்தியாவிலிருந்து தனியே பிரிந்ததால்தான் தம் மக்களை வாழவைக்கவும், பிறரை அங்கிருந்து விரட்டவும் முடிந்தது. ஒரு காலத்தில் இங்கிலாந்தில் அந்நியத் துணி அணிவோருக்கு 30 பவுன் அபராதம்! இப்படிச் செய்து சுதேச நெசவுத் தொழிலை வளர்த்தது இங்கிலாந்து - என்றெல்லாம் கணக்கற்ற ஆதாரங்களை அள்ளி வழங்கினார் பெரியார்.

கட்சி இவ்வளவு வளர்ந்ததும், அதிகார பூர்வமான தினசரி ஏடாகிய “விடுதலை” மாதம் 500 ரூபாய் நட்டத்தில் நடக்கிறதே எனப் பெரியார் அங்கலாய்த்தார். இருப்பினும் கலக்கமுறாது தமது பணியினைத் தொடர்ந்தார். சென்னையில் டாக்டர் நாயர் நினைவுநாள். கோகலே மண்டபத்தில், 1940 - ஜூலை 20 ஆம் நாளில் நடைபெற்ற போது அரிய கருத்துக்களை வழங்கினார். டாக்டர் நாயரை திராவிடத்து லெனின் என வர்ணித்தார். அவர் இருபது ஆண்டுகட்கு முன்பே தனித் திராவிட நாடு கருத்துக்கு ஒரு கருவினைத் தந்தவராம். பதவியில் நமக்கு நாட்டம் இருக்கக்கூடாது: 17-ஆண்டுக்காலம் பதவியிலிருந்தது ஜஸ்டிஸ் கட்சி; ஆனால் அதனால், காங்கிரஸ் தன்னை வளர்த்துக் கொள்ளவே ஏதுவாயிற்று: காங்கிரஸ் 28 மாதம் இப்போது ஆள்வதற்குள், நாம் எவ்வளவு நம்மை வளர்த்துக் கொண்டு விட்டோம்! எனவே நாம் பதவியை நாடாமல், கட்டுப்பாட்டை வளர்ப்போம் - என்றார் பெரியார்.

பெரியாரின் பெருமையினைப் பாராட்ட யங் ஜஸ்டி சைட் லீக் சார்பில் சென்னையில் கன்னிமாரா ஓட்டலில் அக்டோபர் 6-ம் நாள் விருந்தொன்று நடந்தது. பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு பாராட்டினர். அதே திங்கள் 25-ஆம் நாள் சுந்தர வடிவேலு - காந்தம்மா கலப்புத் திருமணம் பதிவு செய்யப்பட்டது; பெரியார் வாழ்த்தோடு!

என்.டி. சுந்தர வடிவேலு எம்.ஏ., எல். டி. கல்வித் துறையில் ஆய்வாளராகத் துவங்கிப் பல்கலைக் கழகத் துணை வேந்தராக ஆறாண்டு பணியாற்றும் உயரம் வளர்ந்தவர். பெரியாரின் அன்புக்குரியவர். குஞ்சிதம் குருசாமி அம்மையாரின் தங்கையான எம்.எஸ்.சி. பட்டதாரி காந்தம் அம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்தவர். ஒரே மகன் இளம் அறிவாளன் வள்ளுவன் மறைவால் உள்ளம் பாதிக்கப்படினும், கல்வி வெள்ளம் பாமரனுக்கும் பாய்ந்திட வழிவகுத்த கொடையாளர். காமராசர் காலத்து மதிய உணவு இவரது திட்டமே.