பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

218



அக்டோபர் முதல் வாரம் பெரியாருக்கு உடல் நலிவு. அதனால், 8.10.50 அன்று சென்னை மாவட்ட நிர்வாகக் குழு கூடியது. வணிக நிலையங்களின் முகப்புப் பலகை விளம்பரங்களில் பிராமணர் அல்லது இந்து அல்லது முஸ்லிம் என்ற சாதி, மத ஆணவங்களைக் குறிக்கும் சொல்லை அகற்ற வேண்டும்; வரும் 16-ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள வடநாட்டார் துணிக்கடை மற்றும் உணவுக் கடைகளின் முன் மறியல் துவக்க வேண்டும் - என்பவை முக்கிய முடிவுகளாகும். சென்னையில் மறியல் களமாக சைனா பஜாரில் ஆரியபவான், கிஷின்சந்த் செல்லாராம் கடைகளின் முன் புறமும், முதல் தளபதியாக ஏ.பி. சனார்த்தனமும்- எனவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எம்.கே. தங்கவேலரும், எம்.கே.டி. சுப்ரமணியமும், மறியல் நாள்தோறும் தொடர்ந்து நடக்க ஆவன செய்து வந்தனர். மறியல் நேரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, முதல் நாள் 8 பேர் கைதாகிப் பின்னர் விடுதலை, செய்யப்பட்டனர். 9.10.50 சேலம் சென்ற பெரியாரைப், புரட்சித் தலைவர் பெரியார் வருகை என வர்ணித்து வரவேற்றனர். சேலம் திராவிடர் கழகத்தினர்!

வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சி தமிழ் நாடெங்கணும் கொழுந்து விட்டு எரிந்தது. ஆங்காங்கு உள்ள பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்ற எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் தார்கொண்டு மறைக்கப்பட்டன. இவற்றை யார் செய்தார்கள் என எவர்க்குந் தெரியாது. அரசுக்கும் புரியாததால், அடக்குமுறை கோர தாண்டவமாடியது. அதனால், பெரியார் பொறுப்புடன் தாமே முன் வந்து, கழகத் தோழர்கள் இம்மாதிரி இரகசிய வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். எனினும், யார் செய்தாலும், இப்படி இரகசிய அழிப்பு வேண்டாம், என்று அறிக்கை விடுத்தார், 17.10.50 “விடுதலை” நாளேடு வாயிலாக 24.10.50 அன்று சென்னைக்கு வருகை தந்த டெல்லி அமைச்சர் இராஜகோபாலாச்சாரியாருக்கு எதிர்ப்பாக தி.மு.க. பெரிய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் போன்றோர் அடித்து உருட்டப்பட்டனர். மக்கள் குழுமியுள்ள இடங்களிலெல்லாம் போலீசார் புகுந்து தடியடி நடத்தினர். அநாவசியத் தலையீட்டைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. 25-ம் நாள் சென்னையில் நடந்த மத்திய திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், நவம்பர் 1-ஆம் நாள் எல்லா ஊர்களிலும் வடநாட்டார் துணிக்கடை முன் மறியல் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக லட்சக்கணக்கான கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். கைத்தடியை ஊன்றிக்