பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

230



அறுதிப் பெரும்பான்மை இல்லாவிடினும், காங்கிரஸ் ஒரே கட்சியாக அதிக இடங்களைப் பெற்றிருக்கிறதே என்று கவர்னர் கூறிய சமாதானம், நேர்மையானதல்ல என்றார் பெரியார். “இந்தத் தேர்தலால் மூன்று நான்கு கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. அதிகாரிகளுக்கும் சர்க்கார் சிப்பந்திகளுக்கும் எவ்வளவோ தொல்லை. பிரிட்டிஷார் ஆட்சி ஒழிய வேண்டுமென்றும், மக்களாட்சி ஏற்பட வேண்டும் என்றும் பாடுபட்டது. இந்த எதேச்சாதிகார நியமன மந்திரிகளைக் கொண்ட - மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத சர்க்காரை, ஆட்சியை அமைக்கத்தானா? இது ஒழிய வேண்டாமா? இப்போது என்முன் உள்ள பிரச்னை இதனைத் தனியே ஒழிப்பதா? கூட்டு முயற்சியாலா? என்பது தான் காங்கிரஸ் ஆட்சி ஒழியவேண்டும் என்பதில் கம்யூனிஸ்டுகள், பிரகாசம் குழுவினர், மற்றும் (தி.மு.க. ஆதரவு பெற்ற) சில சுயேச்சைகள் அக்கறையுடனிருப்பார்கள் எனினும், கம்யூனிஸ்டுகள் தங்கள் தலைமையின் கட்டளைப்படி நடப்பவர்கள்; பிரகாசம் குழுவினர் நமது கிளர்ச்சிகளை ஆதரிப்பார்களா என்பது புரியவில்லை; மற்றவர்கள் சிறை அடி உதை தண்டனைக்கு நம்மோடு வருவார்களா என்பது தெரியவில்லை - எனவே கழகத் தோழர்கள் எப்படியும் ஒரு கிளர்ச்சிக்குத் தயாராயிருங்கள்” என்று பெரியார், 1952 ஏப்ரல் 11, மே 4 ஆகிய நாட்களில் “விடுதலை” தலையங்கம் வாயிலாகத் தமது எதிர்ப்பு முரசினை ஒலித்து விட்டார்.

சாம்பல் பூத்துக் கிடந்த இந்தித் தீயினை ஊதி விட்டனர் காங்கிரஸ்காரர். 1952-ல் ரயில் நிலையங்கள், அஞ்சல் நிலையங்கள் ஆகியவற்றில் இந்திப் பெயர்கள் தலைமையிடம் பெறுமாறு, பலகைகள் வண்ணம் தீட்டப்பெற்றிருந்தன. மத்திய அரசின் இந்தி திணிக்கும் இந்தப் போக்கினைக் கண்டித்து, அந்த இந்தி எழுத்துக்களைத் தார்கொண்டு அழிப்பது என்று பெரியார் முடிவு செய்தார். ஆகஸ்டு 1-ஆம் நாள் இந்தி எதிர்ப்புக்கிளர்ச்சி; இந்தி எழுத்துக்களை அழிப்பது, அவர்களாக அழிக்கும் வரையில் ஒவ்வோராண்டும் ஆகஸ்டு 1ஆம் நாள் இந்தி எதிர்ப்புநாள் என்று பெரியார் பிரகடனம் செய்தார். அதையே திராவிட முன்னேற்றக் கழகமும் பின்பற்றியது. 1952 ஆகஸ்டு 1-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களைத் தார்கொண்டு அழிக்கப் பெரியார் வந்தார். தி.மு.க. போராட்டக் குழு, திருச்சியில் இதே பணியினை ஆற்றிட மு.கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது. தந்தை பெரியார் அதிகாலையில் ஒரு பக்கத்துப் பலகைகளிலிருந்து இந்தி எழுத்துக்களை அழித்திருந்தார். தனயனும், தந்தையும் தனித்தனியே ஊர்வலமாகத் திருச்சி நகரில் எதிரெதிராக வந்தனர். திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்குக் கலைஞரும் சென்று மற்றொரு பக்கத்தில் இந்திப்பெயரை அழித்தார்.