பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்




அ.இ.அ.தி.மு.க. அரசின் தமிழகச் சிறப்புப் பிரதிநிதியாக டெல்லியில், அமைச்சர் தகுதியுடன், பணியாற்றி வருகிறார்.

காட்சிக்கு எளியராயும், கடுஞ்சொல் இலராயும், யார்க்கும் உதவும் இயல்பினராயும் உள்ளதால், அனைவர்க்கும் நல்லவர். பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இவரிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர்.

உலக நாடுகள் அனைத்திலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் பலமுறை. சுறுசுறுப்பாக இயங்கித் தம்மிடம் தரப்பட்ட பணியினை வெற்றியுடன் முடிப்பது இவர்க்குக் கைவந்த கலையாகும்! ஒரே மகனைத் தந்த இவர் துணைவியாரும், பின் இவரது தந்தையாரும் 1978-ல் மறைந்தது பேரிழப்பாகும்!

1952-ஆம் ஆண்டில் பெரியார் செய்து வைத்துள்ள மற்றொரு மகத்தான செயல், சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் அமைத்ததாகும். சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் தொட்டு, அதை ஒரு ஸ்தாபனமாக சொசைட்டி ஆக்டின் கீழ்ப் பதிவு செய்திடப், பெரியார் ஆவல் கொண்டு தொடர்ந்து முயன்று வந்தார். இதன் கொள்கை, திட்டம் விதிகள் எல்லாம் நிர்ணயம் செய்யப்பட்டன. கடைசியில் 1940-ஆம் ஆண்டில், ‘இதை சொசைட்டி ஆக்ட்டின்படிப் பதிவு செய்ய முடியாது’, கம்பெனி ஆக்டின்படி ரிஜிஸ்டர் செய்யலாம்; என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்! கம்பெனி ஆக்டின்படிச் செய்தால் நிர்வாகத்திற்குக் கஷ்டம் ஏற்படுமே என்று பெரியார் சிறிது தயங்கிக் கொண்டிருந்த வேளையில், சேலம் மாநாட்டுத் தீர்மானத்தால் பெரியாரிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்த நண்பர்களான பட்டிவீரன்பட்டி சவுந்தரபாண்டியன், விருது நகர் வி.வி. ராமசாமி, பூவாளூர் பொன்னம்பலனார், கி.ஆ.பெ. விசுவநாதம், ஜே.எஸ்.கண்ணப்பர், சாமி. சிதம்பரனார், எஸ்.இராமநாதன், வை.சு. சண்முகம் ஆகியோர் 1945-ல் சுயமரியாதைச் சங்கம் (செல்ஃப் ரெஸ்பெக்ட் லீக்) என்பதாக ஒன்றை ரிஜிஸ்டர் செய்துவிட்டனர்.

பின்னர், 1948-49 ஆண்டு வாக்கில், மீண்டும் ஓர் ஏற்பாடு செய்யத் திட்டமிடும்போது, அதில் தங்கள் பெயர் இருக்காது என்று கருதிய சிலர், ஏதோ சதி செய்வதாகப் பெரியார் யூகித்தார். அதன் விளைவுதான், அவசரத்தில் ஸ்தாபனத்தைப் பதிவு செய்வதைக் காட்டிலும், ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே மணியம்மையார் திருமணத்தைப் பெரியார் முடிக்க வேண்டியதாயிற்று. ஆகவே 1952ல் வசதியான சூழ்நிலை வந்து விட்டதாகக் கருதியதால் பெரியார் திருச்சியில் 22.9.1952 அன்று பதிவு செய்தார்.

ஸ்தாபனத்தின் பெயர் பெரியார் செல்ஃப் ரெஸ்பெக்ட் பிராப்பகண்டாஇன்ஸ்டிடியூஷன் என்பதாகும். புதிய