பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


திறமை, புலமை, நேர்மைப் பண்புகளின் உயர்வால், கந்தசுவாமித் தம்பிரான் என்னும் துறவியானார். 1919-ல் தெய்வசிகாமணி அருணாசலதேசிக பரமாசாரிய சுவாமிகள் என்ற பெயரோடு குன்றக்குடி மடத்தின் இளைய பட்டம் சூட்டப்பெற்றார். 1952-ல் மகா சந்நிதானமாக உயர்ந்தார். பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்திலுள்ள நியாயத்தை உணர்ந்து, இந்த நூற்றாண்டுக்கேற்ப மதவாதிகளைச் சீர்திருத்த, எண்ணி அருள்நெறித்திருக் கூட்டம் அமைத்தார். பின்னர் தெய்வீகப் பேரவையும் நிறுவினார். சம்பிரதாயத்தை முறியடித்து. இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோசைனா, இந்தோனேசியா, சோவியத் ருஷ்யா முதலான வெளிநாடுகட்கு விமானப் பயணம் செய்தார். நேரு. ராஜாஜி போன்றாரைக் குன்றக்குடி மடத்துக்கு வருகை தரச்செய்தார். பறம்பு மலையில் ஆண்டுதோறும் பாரிவிழா நடத்துவார்.

பெரியார், அண்ணா , கலைஞர் மூவரிடத்தும் அளவற்ற அன்பு பூண்டிருந்தவர். கலைஞராட்சியில் மேலவை உறுப்பினராகச் சட்ட மன்றத்தில் அமர்த்தப் பெற்றார். தமிழில் அர்ச்சனைத் திட்டத்தின் கர்த்தா இவரே. இந்தியாவில் தமிழர் வாழ்வு சிதையும் என உணர்ந்தவர்; உணர்த்தியவர்.

பெரியாரும் குன்றக்குடி அடிகளாரிடம் மிகுந்த பிரியமும் மதிப்பும் கொண்டிருந்தார்; மரியாதையுடன் மகா சந்நிதானம் என்றே அழைப்பார். இவரும் அஞ்சாமல் கழகத்தாருடன் பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார். எந்த ஆதீனகர்த்தரிடமும் காணப்படாத முற்போக்கும் புதுமையும் துணிவும் தெளிவும் இவரிடம் காணப்படுவதால் குன்றக்குடி அடிகளாரைப் புரட்சித் துறவி என நாடு அழைக்கிறது.

13.6.53 திருச்சியில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடிற்று. அக்கிரகார ஆரம்பக்கல்வி எதிர்ப்புக்காக, ஜூலை 14 முதல் சட்டசபைமுன் மறியல் செய்வது, வி.வீராசாமி எம்.பி. இதற்குத் தலைமை ஏற்பது, 20-ந்தேதி முதல் வெளியூர்களிலும் மறியல் தொடங்குவது - என்று முதல் தீர்மானம். அடுத்து, வழக்கம்போல் ஆகஸ்டு 1-ல் ரயில் நிலைய இந்தி எழுத்து அழிப்பு, தமிழரின் எல்லைப் பாதுகாப்புக்காகப் போராடிய ம.பொ. சிவஞானத்தை நேரு பண்டிதர் முட்டாள் எனத் தாக்கியதைத் திராவிடர்கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழர்களை இழிவுபடுத்திய செயலாக எடுத்துக்கொண்டன. தி.மு.க. இதனாலேயே ஜூலை 14-ல் ரயில் நிறுத்தப் போராட்டம் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தொடங்கிற்று. தி.மு.க. நாளேடு “நம்நாடு” 15.6.53 அன்று துவக்கப்பெற்றது.