பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


 விவசாயத் தொழிலாளர்களை மீட்டு, திராவிட இயக்கத்தின் ஆதரவில் கொண்டு வர முயன்று வெற்றியும் பெற்றார். சிறந்த பேச்சாளர், தொய்வு இல்லாத இயக்கப் பணியாளர்.

திருவாரூர் கே.தங்கராசு எழுதிய ரத்தக்கண்ணீர் என்ற நாடகத்தை எம்.ஆர். ராதா நடத்திப் புகழ் சேர்த்தார், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்த நேரத்தில் திராவிடர் கழக மேடையேறிய தங்கராசு மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கினார். பெரியார் காலத்தில் அவரது அன்புக்குப் பாத்திரமாய் இருந்து வந்தார். மறைந்த பிறகு, தனிக் கட்சி தொடங்கும் ஆவலினால் தடம் மாறினார். இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரவணைப் போடும் “தங்கராசு திராவிடர் கழகம்” இயங்கி வருகின்றது. தங்கதுரை என்ற ஒரு திரைப்படமும் இவர் எழுதியதே.

ஏப்ரல் 10, 11 தேதிகளில் மதுரை மாவட்ட மாநாடுகளிலும், அடுத்த நாள் நடந்த பொதுக் கூட்டங்களிலும், பெரியார் காமராசருக்கு வேண்டுகோளாக, டெல்லிக்குக் காவடி எடுக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றும், பார்ப்பனரைத் தனிமைப்படுத்தி ஒதுக்கிட வேண்டும் என்றும், தெரிவித்து வந்தார். காமராசர் பதவி ஏற்றவுடன் பெரியாரை வந்து சந்தித்து வணங்கி மாலை சூட்டினார்! முதல் நற்செயலாக, ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தார்! சட்டமன்றத்தில் ஆச்சாரியாரின் கல்வி அமைச்சராக இருந்து, இதைப் புகுத்திய சி. சுப்ரமணியமே தொடர்ந்து, கல்வி அமைச்சராக இருந்து, இதை ஒழித்திட வகை செய்து, தமிழ் மக்களின் ஒருமித்த பாராட்டைப் பெருமிதத்துடன் பெற்றார் காமராசர்! சிறப்புடன் சென்னையில் வரவேற்கப்பட்ட தந்தை பெரியார் “சனியன் ஒழிந்தது” என்று மகிழ்ச்சியில் திளைத்தார். 16.4.54 அன்று இதை ஒட்டி, விருந்தொன்றும் நடந்தது. சென்னையில் சர்தார் கே. எம். பணிக்கர் பெரியாரைச் சந்தித்து, ஒருமணியளவு, உரையாடி மகிழ்ந்தார்.

ஆச்சாரியார் குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை தஞ்சையிலிருந்து சென்னை வந்து சேர்ந்த போது, திருவல்லிக்கேணி கடற்கரையில், 14.4.54 அன்று, பிரம்மாண்டமான மகிழ்ச்சி வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது. சென்னையில் மேடையில் அவர்களை நிறுத்தி, அறிமுகப்படுத்திய பெரியார். இவர்கள் வந்து, இங்கு போராடிச் சிறை செல்ல எண்ணினார்கள்! பாவம், ஏமாந்தார்கள்! காமராசர் இவர்களை ஏமாற்றி, ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார் என்றார். நான் ஆச்சாரியார் முதல்வராக இருந்தபோது கூட, லஞ்சத்துக்கு வழிவிட மாட்டாரென்று பாராட்டினேன், வந்ததும், பொது ஒழுக்கம் மிகுந்து, லஞ்சப் பழக்கம் ஒழியக் கண்ட்ரோலை எடுத்தார்; நமது சேலம் தீர்மானப்படிக் கைத்தறியாளர் பிரச்சினையைக் கவனித்தார்; நம் விருப்பப்படித் தஞ்சை பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார்!