பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

32


மறைந்தும் போயின. என்றுங் குன்றாத வளத்துடன் பழைமைக்கும் பழைமையாய்ப் புதுமைக்கும் புதுமையாய், உலகவழக்கும், செய்யுள் வழக்கும் ஒருசேரப் பெற்று, நிலவி வருவது நம் தமிழ் மொழியே ஆகும்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்வரையில் தமிழ் மொழி ஒன்றே இங்கு வழக்கில் இருந்து வந்தது. வடமொழியின் ஆதிக்கத் தாக்குதலாலும், போக்குவரத்து வசதிக் குறைவுகளாலும், தமிழ்மொழி உருமாறித் தெலுங்கு என்று ஒரு பகுதியில் வழங்கப்பட்டது. இதனைப் பேசிய மக்கள் தமிழகத்தின் வடபகுதியில் நிறைந்தனர். வடமேற்குப் பகுதியில் வாழ்ந்தோர், சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் கன்னடம் பேசத் தொடங்கினர். எழுநூறு ஆண்டுகட்கு முன், மேற்குப் புறத்து மக்கள் மலையாளம் மொழியத் தலைப்பட்டனர். எனவே பழந்தமிழ் மொழியின் பண்பு கெடாமல், வழங்கப்பட்டு வந்த தமிழ் நாட்டின் எல்லையின் அளவு மட்டுமே சுருங்கியது.

(தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகியவை பிறந்தன என்பது சரியல்ல; தமிழ்தான் திரித்து வழங்கப்படுகிறது எனப் பெரியார் ஈ.வெ.ராமசாமி சான்றுகளுடன் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.)

தமிழ் நாட்டில் சங்ககாலம் என்றழைக்கப்படும் பொற்காலம் ஒன்று, என்றோ இருந்தது! அது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் எனலாம். பரந்த விரிந்த அப்பண்டைத் தமிழகத்தைச் சேரர், சோழர், பாண்டியர் எனும் மூவேந்தர் சீரோடும் சிறப்போடும் ஆண்டு வந்தனர். தமிழ்மொழி செங்கோலோச்சி மிக உன்னத நிலையில் மேலோங்கி நின்றது. தமிழ் பயின்ற புலமைச் சான்றோர் அரசர்க்கே அறிவுரை பகரும் திண்மையும், வன்மையும் உடையோராயிருந்தனர். தமிழ்நாட்டில் அப்போது சாதி சமயங்கள் இல்லை. மதபேதங்கள் இல்லை. குலம்கோத்திரம் கிடையாது. ஆண்டான் அடிமைப் பிளவுகள் இல்லை. கடவுள்கள் பல இல்லை. காதலும் வீரமும் வாழ்வோடு பிணைந்திட்ட, இயற்கையோடு இணைந்திட்ட இன்ப வாழ்வு நிறைந்திட மக்கள் களிப்போடு உலாவந்தனர்.

உலக அரங்கில் மிகவும் மேலாக மதித்துப் போற்றப்படும் நிலையிலிருந்த தமிழகத்தில் கிறித்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஊறு நேரத் தொடங்கிற்று. தமிழ் நாட்டின் அகமும் முகமும் மாறிட அயலவர் நாகரிகம் அடிவைக்கத் துணிந்தது. களப்பிரர் என்னும் அந்நியர் படையெடுத்து, ஆட்சியினைக் கைப்பற்றித் தமிழ்ப் பண்பாட்டினை அழித்ததால் வடமொழி ஆதிக்கமும் படையெடுத்தது; சமண பௌத்த மதங்களும் நுழைந்தன. மொழியிலும் பழக்க வழக்கங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. புராணக் கற்பனைகள் மக்கள் வாழ்க்கையில் ஊடுருவிப் புகுந்தன.