பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



இளம் உள்ளத்தில் இந்த உயர்சாதி மனப்பான்மையைப் பற்றி இராமசாமி நன்றாகப் பதித்துக் கொண்டார். பின்னர், ஆசிரியரிடம்கூட உண்மையை வெளியிடாமல், தண்ணீர் குடிக்க வெளியில் செல்லும்போதெல்லாம், தனக்கு விருப்பத்துடன் தர இசைகின்ற பிறசாதியினர் வீடுகளை நாடினார். வாணியச் செட்டியார், இஸ்லாமியர், முறங்கூடை பின்னுவோர் இவர்கள் வீடுகளில் நாயக்கர்வீட்டுப் பிள்ளைக்குத் தண்ணீர் தந்தனர். தடையில்லை, தயக்கமில்லை. இராமசாமியின் பெற்றோர் அறிந்தால் வெறுப்பார்களே என்று அவர்கள் அஞ்சிய போது, இராமசாமியோ அச்சம் தேவையில்லை என்றார். நாட்கள் செல்லச் செல்ல இராமசாமியின் செயல் இந்தத் துறையில் தீவிரமடைந்தது. தண்ணீரில் தொடங்கியவர், தின்பண்டங்கள் அருந்துவது வரையில் துணிந்து சென்றுவிட்டார். இவர்கள் வீட்டுப் பிள்ளைகளுடன் அதிகம் நெருங்கிப் பழகவும் தொடங்கினார் இராமசாமி.

ஆச்சார அனுஷ்டானங்கள் மிகுந்து, வைதிக மனப்பாங்கு பெருகித், தம்மை உயர்வகுப்பு வைணவப் பார்ப்பனர் போன்றே கருதிக்கொண்டு வாழ்ந்துவந்த வெங்கட்ட நாயக்கரும், சின்னத் தாயம்மையாரும், தமது இளைய புதல்வனின் இந்த அடாத செயல்களைக் கேட்டுத் துடிதுடித்துப் போயினர். கண்டவர் வீடுகளில் சாப்பிடுவது தவறு எனக் கண்டித்துக் கோபித்தனர். பயன்தராது போகவே, மகனின் கால்களில் விலங்குக் கட்டைகளைப் பூட்டி வருத்தித் தண்டித்தனர்.

மூன்றாண்டுகள் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்கும், இரண்டாண்டுகள் ஆங்கிலம் போதிக்கும் பள்ளிக்கும், இராமசாமியைப் பெற்றோர் அனுப்பி வந்ததுகூட, அவர் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால் அல்ல; வீட்டிலிருந்து தொந்தரவு தருவதை விட, எங்கோ வெளியில் சென்றுவிட்டாவது வரட்டுமே என்ற எண்ணத்தால்தான்!

பத்தாவது வயதிற்குள் பள்ளி ஆசிரியர்கட்கும் பெற்றோருக்கும் தீராத தலைவலியைத் தந்து வந்த இராமசாமி, தமது அய்ந்தாண்டுப் பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார். பிள்ளைக்குப் படிப்பு ஏறாது என்று கண்டறிய அய்ந்தாண்டுகள் பிடித்ததாம் அவர்கட்கு! படிப்பு ஏறவில்லை என்றாலும், தமது மகனின் அறிவுத்திறன், ஆற்றல், கூர்மை இவைகளில் தந்தையார்க்கு மெத்த நம்பிக்கையுண்டு. படிப்பில் கவனஞ் செலுத்தாவிடினும் இராமசாமியைத் தொழிலில் நுழைத்துவிட்டால், உழைத்து உயரும் தன்மை நிரம்ப அவருக்கு இருப்பதை, வெங்கட்ட நாயக்கர் உணர்ந்து, அவரைத் தமது ஏலமண்டிக்கே அழைத்துக்கொண்டார்.

தமது பன்னிரண்டாவது வயதிலேயே, இந்தச் செல்வந்தரின் திருக்குமாரன், மண்டிக்கடையில் மூட்டைகளில் குறிப்பு எழுதுதல்,