பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

42


ஏலங்கூறுதல், சரக்குகளை உயர்ந்த விலைக்கு விற்றல், வாடிக்கையாளரை நழுவவிடாமல் பற்றுதல் ஆகிய செயல்களை மிகுந்த ஆர்வத்துடன் செய்து வந்தார். தந்தையார்க்கும் மகன்மீது பாசமும் பற்றும் வளரத் துவங்கின. மிகத் தேர்ந்த வணிகராக மாறிவந்தார் நமது ஈ.வெ. இராமசாமி!

வணிகராயினும், பிறவிக் குறும்பு குறைவாகிப் போகுமா? வைணவ மதவாதிகளின் புகலிடமாக அப்போதெல்லாம் வள்ளல் வெங்கட்ட நாயக்கரின் இல்லம் இலங்கியதே! வருவார் போவார் ஏராளம். சாதுக்கள், சந்நியாசிகள், பாகவதர்கள், பக்திமான்கள், வித்வான்கள், பண்டிதர்கள், சமயப் பிரச்சாரகர்கள் - இப்படி எந்த நேரத்திலும் வீடே அமர்க்களமாக விளங்கும். சைவ வைணவப் புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் அடிக்கடி நிகழும்.

இராமசாமிக்கு இவற்றைக் கேட்பதில் தனியானதொரு நாட்டம் பிறந்தது. தாமே படித்து அறியவில்லை எனினும் இராமாயணம், பாரதம், பாகவதம் மற்றும் புராணங்கள் இவற்றையெல்லாம் கேட்டறிந்தே தமது அறிவினைக் கூர்மையாக்கிக் கொண்டார். சமயக் கருத்துக்கள், சாத்திர சரித்திர தர்க்க வாதங்கள் யாவும் கேள்வி ஞானத்தினாலேயே உணர்ந்தார். இவற்றை அதிகமாகக் கேட்கக் கேட்க, அவருள்ளே எதிரிடையான பயன் உருவாகத் தொடங்கிற்று. தர்க்கத்திறன் வளர்ந்தது. ஏன்? எதற்காக? எப்படி? என்ற கேள்விகளை எழுப்பும். முனைப்பு பெருகிற்று. வாதம் புரியவேண்டும் என்று வேணவா எழுந்தது.

ஆதரவாளரின் அருமருந்தன்ன செல்வன், தம்மிடம் விதண்டாவாதம் பேசும்போது, பண்டிதர்கள் கோபித்துக்கொள்ள முடியாதே! அவர் கேள்விக்கு ஏற்ற பதிலைத் தந்திட அவர்களிடம் சரக்கு ஏது? தடுமாற்றம், தாறுமாறாகப் பிதற்றல், மாறுபடக் கூறல் இவைதாம் பதில்களாகக் கிடைத்து வந்தன இராமசாமிக்கு. விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் தொடங்கிய இந்த வேலையினால், நாளடைவில் இராமசாமிக்குக் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின்மீது நம்பிக்கையில்லாமலே போய்விட்டது!

நூல்களைப் பயிலாமலே கேள்வித்திறனால் கண்டாரைக் கதிகலங்கவைத்த இராமசாமி, அந்த இளம்பிராயத்தில் செய்த திருவிளையாடல்கள் பல. கடைவீதியில் இவரது மண்டிக் கடை. செல்லும் வழியில் இருந்தது ஓர் அய்யரின் கடை. தினந்தோறும் அவரிடம் வாதம் புரிவது இராமசாமிக்கு உற்சாகமான காரியம். எல்லாம் தலை விதிப்படி நடக்கும்; அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது அய்யரின் அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தக் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்து இராமசாமியிடம் வாதாடுவார் அய்யர்.