பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

451



24-ந் தேதி அதிகாலை திண்டிவனம் அருகில் நடந்த ஒரு கார் விபத்தில் அமைச்சர் கலைஞரும், அவரோடு சென்ற மதுரை முத்து, கவியரசு பொன்னிவளவன், கருணானந்தம் ஆகியோரும் சிக்குண்டனர். கார் பெருத்த சேதத்துக்குள்ளாகி டிரைவர் பாண்டியும், பலத்த காயத்துக்காளானார். கலைஞருக்கும் பெரிய ஆபத்து, மயிரிழையில் தப்பினார். அன்று காலை அண்ணாவும் பிற அமைச்சர்களும் திண்டிவனம் வரை சென்று அழைத்துவந்து, மாலையில் சென்னைப் பொது மருத்துவமனையில் கலைஞரைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெரியாரும் மணியம்மையாரும் அவரைப் பார்க்க 25.9.67 காலை 10 மணிக்கு மருத்துவமனை சென்ற போது, 50 கார்களாம்; ஆவல் நிறைந்த முகத்துடன் ஏராளமாக மக்கள் காத்திருந்தார்களாம்; பெரியாரே குறிப்பிடுகின்றார்! அடுத்து இருவரும் 11.15 மணிக்கு அடையாறு அரண்மனை சென்று ராஜா சர் முத்தையச் செட்டியார் அவர்களையும் ராணியார் அவர்களையும் கண்டு சிறிது பொழுது அளவளாவித் திரும்பினர். அரசு சார்பில் குடும்பக் கட்டுப்பாடு நாள் என 16/9 முதல் 30/9 வரை கொண்டாடப்பட்டதைப் பெரியார் வரவேற்று எழுதினார்.

“திருவள்ளுவர் பகுத்தறிவுவாதியா என்று கேட்டால் ஆம் என்பதற்கும் என்னிடம் ஆதாரமுண்டு; இல்லை என்பதற்கும் ஆதாரமுண்டு. ஆகவே அவர் எந்தக் குறளில் பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறியுள்ளாரோ, அதற்காக நான் வள்ளுவரைப் போற்றுவேன்; மடமைக் கருத்துக்காகத் தூற்றுவேன். இரண்டும் செய்வேன்” என்று பெரியார் கருத்தெழுதினார். “ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவதே தவிரத் தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவதல்ல என்று பகுத்தறிவு வாதிகள் கருதுவோம். காங்கிரஸ் காரர்கள் ஜனநாயகவாதிகளா என்றால், இல்லை ! பக்தவத்சலமும், அளகேசனும் இப்போது ஊரூராய்ச் சென்று, காமராசருக்கு எதிர்ப்பு அணி உருவாக்குகிறார்கள். “நவசக்தி”ஏடு. நம்மையே நன்றி கெட்டதனமாகத் தாக்கத் தொடங்கியிருக்கிறதே!” என்றும் எழுதினார் பெரியார்.

1.10.67 அன்று சிவசேனை எதிர்ப்பு ஊர்வலத்தில் சென்னையில் பெரியாரும் கலந்து கொண்டார். ஒழிக கோஷங்களே கூடாது என்று கூறிவிட்டார். போலீசார் நல்ல முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்ததாகப் பெரியாரே பாராட்டிக் கூறினார். அடாதமழையிலும் விடாது கூட்டம் நடந்தது. பெரியார், வீரமணி, பாலசுந்தரப்பாவலர் பேசினர், சுரண்டல் கடுப்புக் கிளர்ச்சியில் பங்கு பெற, மணமாகாத ஆண், பெண் தொண்டர்கள் முன்வரலாம் என்றார் பெரியார்.

சிங்கப்பூரிலும், பம்பாயிலும், தமிழ்ப் பெருமக்கள் வாழுமிடங்களிலெல்லாம் பெரியார் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாய்க் கொண்டாடப்பட்டது. முன்னாள் சுப்ரீம் கோர்ட்