பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

491



"விடுதலை" - எழுத்துகள் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவுடன் காட்சி தந்தது. நாள்தோறும் "பெரியார் பொன் மொழிகள்" தவறாமல் இடம் பெற்றன. உலக பாங்க் தலைவர் மக்னமாரா தமிழ்நாடு அரசின் சிறந்த நிர்வாகத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார். டெல்லி மக்களவையில் 'தமிழ்நாடு' பெயர் சூட்டும் தீர்மானம் வெற்றியுடன் மலர்ந்தது. அண்ணா வாரந்தோறும் சனி ஞாயிறுகிழமைகளில் காஞ்சியில் தங்கி ஓய்வெடுத்த வந்தார். வேலூர் நாராயணன் சென்னை மாநகர மேயரானார். நடைபாதைக் கோயில்களை அகற்றுவதென அவர் உறுதி பூண்டார். மிரட்டல் கடிதங்கள், காகிதப் புலிகளின் கதறல்களை அவர் பொருட்படுத்தவில்லை!

திருச்சியில் நவம்பர் 15ம் நாள் கி.ஆ.பெ. விசுவநாதம் 70வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் பெரியார் பங்கேற்றார். சி.சுப்ரமணியம் அவர்களின் மகள் அருணா-ஈரோடு டாக்டரும் பெரியாரின் அன்பருமான எல்.கே. முத்துசாமி அவர்களின் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் திருமணம், 24.11.68 அன்று சென்னை ஆபட்ஸ்பரியில் நடைபெற்ற போது, பெரியார் சென்றிருந்தார். காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோர் பெரியாரிடம் வந்து, வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்தனர். அடுத்த நாள் "விடுதலை" யில் பெரியார் “கூலிக்காகவும் வரும்படிக்காகவும் காங்கிரசில் இருக்கிறவர்கள் நீங்கலாக மற்றவர்கள் காங்கிரசைக் கைகழுவிவிட்டு வெளியே வாருங்கள்! காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளை உங்கள் கைகளாலும் தொடாதீர்கள் எவ்வளவு மோசமான தமிழன் ஆனாலும் தமிழன் என்கிற உணர்வு கொள்ளுங்கள்' என்று வேண்டினார். இதற்கு முன்னதாகச் சேத்தியாதோப்பு பொதுக் கூட்டம் ஒன்றில் "அரசு அலுவலகங்களிலுள்ள கடவுள் பட நீக்கக் கிளர்ச்சி ஒன்று நடத்த இருக்கிறேன். உருவமில்லாதவர் கடவுள் என்று சொல்லிக்கொண்டே, பலவிதப் படங்களை மாட்டித் தொங்கவிடும் மடமையை ஒழிக்கப் பெருவாரியாகக் கிளர்ச்சியில் ஈடுபட முன் வாருங்கள்!" என்று அழைப்பு விடுத்தார் பெரியார்.

தமிழ்நாடு பெயர் மாற்ற வெற்றி விழாக் கூட்டத்தில் அண்ணா 1.12.1968 அன்று பேசினார். மூன்று மாதமாகப் பேசவிடாமல் உடல் நலிவு தடுத்ததல்லவா? அன்றுங்கூடப் பொதுக் கூட்டத்தில் பேச வேண்டாமென்றுதான் மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். இன்றைய தினம் நான் பேசுவதால், என் உடலுக்கு ஊறு நேரிடுமானால், இந்த உடலிருந்து எனக்கு என்ன பயன்?” என்று கேட்டுவிட்டு அண்ணா , தமது அரசின் மாற்றிட முடியாத முப்பெரும் சாதனைகளைக் குறிப்பிட்டார். பள்ளிகளில் இந்தியை ஒழித்தது, சுயமரியாதைத் திருமணச் சட்டம்; தமிழ் நாடு பெயர் மாற்றம் ஆகியவை.