கவிஞர் கருணானந்தம்
491
திருச்சியில் நவம்பர் 15ம் நாள் கி.ஆ.பெ. விசுவநாதம் 70வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகளில் பெரியார் பங்கேற்றார். சி.சுப்ரமணியம் அவர்களின் மகள் அருணா-ஈரோடு டாக்டரும் பெரியாரின் அன்பருமான எல்.கே. முத்துசாமி அவர்களின் மகன் ராமகிருஷ்ணன் ஆகியோரின் திருமணம், 24.11.68 அன்று சென்னை ஆபட்ஸ்பரியில் நடைபெற்ற போது, பெரியார் சென்றிருந்தார். காமராஜ், நிஜலிங்கப்பா ஆகியோர் பெரியாரிடம் வந்து, வணக்கம் தெரிவித்து, நலம் விசாரித்தனர். அடுத்த நாள் "விடுதலை" யில் பெரியார் “கூலிக்காகவும் வரும்படிக்காகவும் காங்கிரசில் இருக்கிறவர்கள் நீங்கலாக மற்றவர்கள் காங்கிரசைக் கைகழுவிவிட்டு வெளியே வாருங்கள்! காங்கிரஸ் பத்திரிகைகள் என்பவைகளை உங்கள் கைகளாலும் தொடாதீர்கள் எவ்வளவு மோசமான தமிழன் ஆனாலும் தமிழன் என்கிற உணர்வு கொள்ளுங்கள்' என்று வேண்டினார். இதற்கு முன்னதாகச் சேத்தியாதோப்பு பொதுக் கூட்டம் ஒன்றில் "அரசு அலுவலகங்களிலுள்ள கடவுள் பட நீக்கக் கிளர்ச்சி ஒன்று நடத்த இருக்கிறேன். உருவமில்லாதவர் கடவுள் என்று சொல்லிக்கொண்டே, பலவிதப் படங்களை மாட்டித் தொங்கவிடும் மடமையை ஒழிக்கப் பெருவாரியாகக் கிளர்ச்சியில் ஈடுபட முன் வாருங்கள்!" என்று அழைப்பு விடுத்தார் பெரியார்.