500
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
3-ந் தேதி இரவு ஒருமுறை ராஜாஜிஹால் சென்று வந்த பெரியார், 4-ந்தேதி அதிகாலையிலேயே புறப்பட்டுத் தமது வேனிலேயே அமர்ந்து, இறுதி ஊர்வலத்தில் சென்றார். இந்திய வரலாறு காணாத இறுதி ஊர்வலம் -40 லட்சம் மக்கள் கோவெனக் கதறிக் - குலுங்கிக் குலுங்கி அழ ஏழை மாந்தரின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஏந்தல்-தமது 60-வது வயது பூர்த்தியாகு முன்னரே வாழ்வு நீத்துப் புறப்பட்டார். கலைஞரின் மதியூகத்தினால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு எதிரே கடலோரத்தில், அண்ணாவின் சடலம் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு, இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது - என்று பொறிக்கப்பட்ட கல்லும், நினைவுச் சின்னமாய் நெடுந்தூணும், அணையா விளக்கும், உதய சூரியனும், இரைதேடும் பொம்மை விலங்குகளும், அழகிய பூங்காவும், அகலாத பொன் மொழிகளும் பொலிந்திடப் பின்னாளில் அண்ணா சதுக்கமாய் உருவாக்கிக் காட்டினார் அண்ணாவின் தம்பி கலைஞர். பெரியார், அருகே செல்ல இயலாமல், சதுக்கத்தின் வெளியிலேயே காத்திருந்தார். காமராஜர், சி. சுப்ரமணியம், சவான், மற்றும் மத்திய-மாநில அரசுப் பிரதிநிதிகள், ஆளுநர் அனைவரும் வந்திருந்தனர் இராஜாஜி தவிர!
5.2.69 அன்று “அண்ணாவின் இறுதி நிகழ்ச்சி” எனப் பெரியாரே தலையங்கம் எழுதியிருந்தார். “விடுதலை" யில்: “இது 'அகிலமே காணாத அரும்பெரும் நிகழ்ச்சியாகும். நான் வானொலியில் பேசும் போது, அண்ணாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த கூட்டம் 15 லட்சம் இருக்கும் என்று சொன்னேன். எனக்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டேன். அது குறைவு என்றார்கள். ஆமாம் 25 லட்சம், 30 லட்சம் என்று சொல்லப்பட்டது.
சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டு, சடலத்தைக் கண்டு துக்கப்பட்டுக் கதறிக் கூப்பாடு போட்டுக், கூவி அமுத மக்களின் எண்ணிக்கையைப் போல நான் இதுவரை எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை!