பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

500

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


பின்னும்! அண்ணா மறைந்தார் என்ற சேதி கேட்டுப் பலர் மாரடைப்பால் மறைந்தனர். ரயில் கூரை மீது ஏறிவந்து, அறியாமையால் பாலத்தில் சிக்குண்டு, சிதம்பரம் அருகில் மாண்டவர் பலபேர். ராஜாஜி ஹாலில் உடலைக் கண்டு அங்கேயே மாரடைத்து மாண்டவர் சில பேர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், ஏறியும், குதித்தும், தாண்டியும், மிதிபட்டும், சிக்கியும், நசுக்குண்டும், சிதைந்தவர் பல்லாயிரம் பேர் ராஜாஜி ஹாலின் உட்புறம் வைத்துச் சமாளிக்க முடியாமல், காமராஜர் யோசனையின்படி, வெளியிலே படிக்கட்டு மீது, சிறிது நேரம் வைத்துக் காண்பிக்கப்பட்டது.

3-ந் தேதி இரவு ஒருமுறை ராஜாஜிஹால் சென்று வந்த பெரியார், 4-ந்தேதி அதிகாலையிலேயே புறப்பட்டுத் தமது வேனிலேயே அமர்ந்து, இறுதி ஊர்வலத்தில் சென்றார். இந்திய வரலாறு காணாத இறுதி ஊர்வலம் -40 லட்சம் மக்கள் கோவெனக் கதறிக் - குலுங்கிக் குலுங்கி அழ ஏழை மாந்தரின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்த ஏந்தல்-தமது 60-வது வயது பூர்த்தியாகு முன்னரே வாழ்வு நீத்துப் புறப்பட்டார். கலைஞரின் மதியூகத்தினால் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு எதிரே கடலோரத்தில், அண்ணாவின் சடலம் சந்தனப் பேழையில் வைக்கப்பட்டு, இராணுவ மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது - என்று பொறிக்கப்பட்ட கல்லும், நினைவுச் சின்னமாய் நெடுந்தூணும், அணையா விளக்கும், உதய சூரியனும், இரைதேடும் பொம்மை விலங்குகளும், அழகிய பூங்காவும், அகலாத பொன் மொழிகளும் பொலிந்திடப் பின்னாளில் அண்ணா சதுக்கமாய் உருவாக்கிக் காட்டினார் அண்ணாவின் தம்பி கலைஞர். பெரியார், அருகே செல்ல இயலாமல், சதுக்கத்தின் வெளியிலேயே காத்திருந்தார். காமராஜர், சி. சுப்ரமணியம், சவான், மற்றும் மத்திய-மாநில அரசுப் பிரதிநிதிகள், ஆளுநர் அனைவரும் வந்திருந்தனர் இராஜாஜி தவிர!

5.2.69 அன்று “அண்ணாவின் இறுதி நிகழ்ச்சி” எனப் பெரியாரே தலையங்கம் எழுதியிருந்தார். “விடுதலை" யில்: “இது 'அகிலமே காணாத அரும்பெரும் நிகழ்ச்சியாகும். நான் வானொலியில் பேசும் போது, அண்ணாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்த கூட்டம் 15 லட்சம் இருக்கும் என்று சொன்னேன். எனக்குத் தோன்றியதைச் சொல்லிவிட்டேன். அது குறைவு என்றார்கள். ஆமாம் 25 லட்சம், 30 லட்சம் என்று சொல்லப்பட்டது.

சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டு, சடலத்தைக் கண்டு துக்கப்பட்டுக் கதறிக் கூப்பாடு போட்டுக், கூவி அமுத மக்களின் எண்ணிக்கையைப் போல நான் இதுவரை எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை!