பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

511



பெரியார் அவர்களோடு நாங்கள் இரண்டறக் கலந்து இருந்தோம். இடையிலே ஒரு பதினெட்டு ஆண்டுக்காலம், பெரியார் அவர்களுக்கும் எங்களுக்கும் இடையிலே ஊடல். அதைப் பெரியார் அவர்கள் பல மேடைகளிலே குறிப்பிட்டிருக்கின்றார்கள். அந்த ஊடல் உள்ளபடியே எங்களுக்குள் வியூகம் வகுத்து ஏற்படுத்திக் கொண்ட ஊடல் என்று அண்ணா சொல்வார்கள்.

அய்யா அவர்கள் சொல்வார்கள். 'பதினெட்டு ஆண்டுக்காலம் நான் இவர்களைத் தாக்கினேன்; ஏசினேன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள்' என்று. ஆனால் அய்யா அவர்கள் தாக்குதலையும் ஏசல்களையும், எங்களுக்கு அவர்கள் தருகின்ற பயிற்சியாக நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

நெல் பயிரிடுகின்ற விவசாயிகளுக்கு நன்றாகத் தெரியும். நெற்கதிரோடு வைக்கோலைக் களத்தில் போட்டு, மாடுகளைவிட்டு மிதிக்கச் சொல்வார்களே, அது எதற்காக? அந்த நெற்பயிருக்குத் துன்பம் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவா? அல்ல அல்ல; மாடுகள் மிதிக்க மிதிக்க நெல் மணிகள் கிடைக்கும் என்பதற்காக அதைப்போல நெல்கதிர்களாகிய எங்களைப் பெரியார் பதினெட்டாண்டுகளாக மாடுகளை விட்டு மிதிக்கச் செய்து, போரடித்து. இப்போது கிடைத்திருக்கிற நெல்மணிகளைக் கையிலெடுத்து, அள்ளிப் பார்த்து. ஆகா மரகதமணிகள்! மாணிக்க மணிகள் என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கின்றார்!

காஞ்சியில் திரு.வி.க. தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், துண்டை உதறித் தோளிலே போட்டுக் கொண்டு, தன்னுடைய கைத்தடியைத் தரையிலே வேகமாக ஊன்றிக், காங்கிரசை ஒழித்துக் கட்டி விட்டுத் தான் மறு வேலை பார்ப்பேன், என்று வெளியேறினார் பெரியார். அப்படி வெளியேறியவர் பதினெட்டு ஆண்டுக் காலம் காங்கிரஸ் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்தார் என்றால் யாரும் நம்பமாட்டார்கள்; அவரும் ஒத்துக் கொள்ளமாட்டார்! ஏனென்றால், அவரே சொல்லியிருக்கிறார். நான் காமராசரைத்தான் ஆதரிக்கிறேன்; காங்கிரசை அல்ல என்று!

நாங்களெல்லாம் இல்லாத நேரத்தில், மிச்சமிருப்பவர்களுக்குச் செலவு வைக்க வேண்டாம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் மேடைபோட்டுக் கொடுக்க, மைக் வைத்துக்கொடுக்க, அவர்கள் செலவிலேயே, அவர்கள் பெரியார் வாழ்க என்று சொல்லச் சொல்லத் தைரியமாக அதே மேடையிலிருந்து கொண்டு, நான் காங்கிரசை ஆதரிக்க மாட்டேன் காமராசரை மாத்திரமே ஆதரிப்பேன், என்று சொல்லக் கூடிய புரட்சிக்காரர், பெரியாரைத் தவிர, இந்தத் தரணி முழுதும் வேறு ஒருவரைக் காணமுடியுமா?