பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

520

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



91-வது ஆண்டு பிறந்தநாள் செய்தியாகப் பெரியார் எனது நிலை" என்ற தலைப்போடு கட்டுரை வரைந்தார்:- எனது 90-வது ஆண்டு பிறந்தநாள் விழா மலரில் எனது நிலை என்கிற கட்டுரை எழுதும்போது, 91-வது ஆண்டு பிறந்தநாள் விழா மலருக்கு எனது நிலை என்பது பற்றி எழுத வேண்டிய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் எழுதினேன். என்றாலும் எப்படியோ வாய்ப்பு ஏற்பட்டது. முன்பு, "எனக்கு வயது 90; உடல் நிலை மிகவும் மோசம்; கைகால் நடுக்கம் அதிகம்; சிறுநீர் கழிக்கும் போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன்; அதாவது அவ்வளவு வலி, தூக்கம் சரியாய் வருவது இல்லை ; நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில் வலி ஏற்பட்டு, சில ஏப்பமோ காற்றுப் பிரிவோ ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது; உண்ட உணவு சரியானபடி ஜீரணமாவதில்லை; முன்போல் உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை; எந்தக் காரியம் பற்றியும் மனத்திற்கு உற்சாகம் ஏற்படுவதில்லை ; களைப்பு அடிக்கடி ஏற்படுகிறது; நெஞ்சில் வலி திடீரென்று ஏற்படுவதும், ஏப்பம் வந்த பிறகு குறைவதுமாக இருக்கிறது; எதைப் பற்றியும் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு விடுகிறது.

சுருக்கமாகச் சொல்லுவதானால், வாழ்வே வெறுப்பாக இருக்கிறது. என்றாலும் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். நினைத்தபடி நினைத்த ஊருக்கெல்லாம் என்னை அழைக்காதீர்கள். அப்படி என்னை மக்கள் அழைக்காமல் இருப்பதற்காகவே எனது வழிச்செலவுத் தொகையை ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக ஏற்படுத்தி விட்டேன். ரூ.100 எனக்கு வண்டிச் செலவு, ரிப்பேர் செலவு, வைத்தியச் செலவு முதலியவைகளுக்கு அநேகமாகச் சரியாகப் போய்விடும். சில சமயங்களில் போதாமல் போகும். ஒரு தடவையில் 2, 3 பயணம் ஏற்பட்டால் ஓரளவு மீதியாகி, பிரச்சாரத்திற்குப் பயன்படும். எனக்கு இனிப் பிரச்சாரத்தில் ஆசை இல்லை . ஒரு வாரப் பத்திரிக்கை துவக்கி, அதற்கு ஆசிரியனாக இருந்து எழுதிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதில்தான் ஆசை அதிகமாக இருக்கிறது. இன்னும் என்னால் வெளியாக்கப்படவேண்டிய விஷயம் அதிகம் இருக்கிறது.

இதற்காக, எளிதில் என்னைக் காணமுடியாத ஒரு தனி இடத்திற்குப் போய்விடலாமா, அல்லது ஈரோட்டிற்கே போய் விடலாமா, என்றுகூட எண்ணுகிறேன். இனி என் ஆயுள் எவ்வளவு இருக்க முடியும் என்பதில் எனக்குக் கவலை இல்லை . இருந்தவரை தொண்டு செய்யலாம் என்றுதான் திட்டம் போடுகிறேன். ஆனால் எதிர்பாராத சம்பவங்கள் நடப்பதும் ஏற்படுவதும் இயற்கையேயாகும். அதுபோல் என் முடிவும் இருக்கலாம்.