பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

529



"மதத்திற்கும், சாத்திரங்களுக்கும் கடவுளை எஜமானனாக, மூலகர்த்தாவாக வைத்து உண்டாக்கினார்கள் என்றாலும்; கடவுள் வேறு, மதம் சாஸ்திரம் வேறு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் கடவுள் அறியாமையில் இருந்து தோன்றியதாகும். மதமும் சாத்திரங்களும் அயோக்கியத்தனத்திலிருந்து, அதாவது மக்களைப் பயப்படுத்தி அடிமைகளாக்க வேண்டும் என்ற எண்ணத்தின் உண்டாக்கப்பட்டவைகளாகும். கடவுளைக் கற்பித்தவனை மன்னித்து விடலாம். ஆனால் மதம் சாத்திரங்களைக் கற்பித்தவனை மன்னிக்கவே கூடாது என்றார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல். கடவுளைக் கற்பித்தவன், உலக உற்பத்திக்கும் நடப்புக்கும் ஒரு கடவுள் அல்லது கர்த்தா இருக்க வேண்டுமே என்று சந்தேகத்தின் பலனை (Benefit of doubt) கடவுளுக்குக் கொடுக்கிறான். ஆனால் மதமும் சாஸ்திரமும் முழுப்பொய்யாகவே கற்பனை செய்து, மக்களை ஏய்ப்பதற்கென்றே, பயப்படுத்துவதற்கென்றே பாகுபடுத்தி அமைத்திருக்கின்றான். அதனால்தான் அவற்றில் மாறுபாடும், முரண்பாடும் இவ்வளவு அதிகமாக உள்ளன.

இந்து மதத்தைப் பார்ப்பனர் வேத மதம் என்கிறார்கள். பார்ப்பனர் தங்களை ஆரியர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதனால் அதை ஆரிய மதம் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால், பிராமண மதமென்றும், கிறிஸ்வர் முகமதியர் அல்லாதார் மதம் என்றும் குறிப்பிடப பட்டிருக்கிறது.

ஆகவேதான் கடவுள் நம்பிக்கை. மதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டுமென்று கூறுகிறோம்."

கடவுள் நம்பிக்கைக்காரர்களைப் பற்றிப் பெரியார் என்ன கருதுகிறாராம்:- "ஒரு தேவதாசியை விபசாரி என்று சொன்னால், ஒரு வக்கீலை அவர் காசுக்காகப் பேசுகிறவர் என்று சொன்னால், ஒரு வியாபாரியை அவர் பொய் பேசுகிறவர் என்று சொன்னால், எப்படிக் கோபித்துக் கொள்வார்களோ - அதேபோல் கடவுள் நம்பிக்கைக் காரர்களை முட்டாள் அயோக்கியன் காட்டுமிராண்டி என்று சொன்னால் - கோபித்துக் கொள்கிறார்கள்.

சர்வவல்லமையுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என்பதை நான் என் மனம் மொழி மெய்களால் நம்புகிறேன், அதற்கேற்பவே நடந்து கொள்கிறேன் என்று யாராவது ஒருவர் முன்வந்து சொல்லித் தனது -நடத்தையைக் கொண்டு நிரூபித்துக் காண்பிக்கட்டும்; நான் பதினாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன். யோக்கியமானவர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும் என்று சவால் விடுகிறேன்.