பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

560

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நல்ல எண்ணத்தைத் தெரிவித்து வாழ்த்துப் பெற்றுச் சென்றனர்.

மாத இறுதியில் பெரியார் பயணத்தை முடுக்கிவிட்டார்; 20 திருச்சி, 21 தஞ்சை , 22 நன்னிலம், 23 சேலம், 24 திருப்பத்தூர் (வ.ஆ.), 25 சீரங்கம், 26 சிதம்பரம் என்பதாக, 20-2-71 காலை 8 மணியளவில் பெரியார்பால் பேரன்பு பூண்ட நண்பர் சே. மு. அ. பாலசுப்ரமணியம் திருச்சியில் காலமான உடன், பெரியாரும் மணியம்மையாரும் சென்று துக்கம் விசாரித்தனர்.

25-2-71 அன்று இரவு 11-45 மணிக்கு ஈரோட்டில் பெரியாரின் இலட்சியத் தங்கையான எஸ்.ஆர். கண்ணம்மாள் மறைந்தார். பெரியார் சீரங்கத்திலிருந்து ஈரோட்டுக்கு விரைந்தார். முதல்வர் கலைஞர் அனுதாபத் தந்தி அனுப்பியிருந்தார்.

சென்னைக் கடற்கரைப் பெருமணற் பரப்பில் 21-ந் தேதி சோ என்ற ஜனசங்கவாதியும், 25-ந் தேதி இராஜாஜி, காமராஜர் ஆகியோரும் பேசிய இருபெரும் பொதுக்கூட்டங்களுக்கு வந்திருந்த கார்கள், சென்னையில் இதுவரை எப்போதும் வந்ததில்லை. காமராஜர் நெற்றியில் இராஜாஜி வெற்றித் திலகமிட்டு ஆசீர்வதித்தார். இந்த இரு கூட்டங்களையும் கண்டு, ஈசிச்சேர் பாலிட்டீஷியன்ஸ், நிச்சயம் இத்தோடு தி.மு.க. வீழ்ந்தது; இந்திராவும் ஒழிந்தார் என மதிப்பிட்டனர்.

முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்த பின் திருச்சியில் 3-3-71 அன்று நிருபர்களிடையே பேசிய முதல்வர் கலைஞர் “முன்பு பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினையைப் பெரியார் துவக்கினார். இந்தத் தேர்தலில் இராஜாஜி துவங்கியிருக்கிறார்" என்றார். 8-3-71 அன்று காமராஜர் இராஜாஜி வீட்டுக்குச் சென்றிருந்தார். முடிவுகள் வரத்தொடங்கும் நேரமாகையால், தமிழ் நாட்டு மந்திரி சபையை எப்படி அமைப்பது என்பது குறித்து இருவரும் பேசியதாக ஒரு சாரார் கூறினர். தேர்தல் பயம் மிகுந்ததால் போனதாகவும் இன்னொரு தரப்பில் கூறப்பட்டது. எதற்குப் போனார்களோ? 11-3-71 அன்று “விடுதலை"யில் முதல் பக்கச் செய்தி - இது தேர்தல் அல்ல இனப்போர் என்று சொன்ன தந்தை பெரியார் வெற்றி - இதுவரை வெளிவந்த முடிவுகளில் சட்ட மன்றத்திற்கு தி.மு.க. 111, சிண்டி. காங்கிரஸ் 5, சுதந்தரா 5, பார்வர்ட் பிளாக் 3, வலது கம்யூ 1, லீக் 3, பி.சோ. 1, விவசாயி 1, சுயே. 2.

“உங்களைப் பாராட்ட எனக்குத் தமிழில் வார்த்தை இல்லை. எனக்குப் பழி நீங்கியது. உங்களுக்கு உலகப் புகழ் கிடைத்தது.

ஈ.வெ. ராமசாமி."